ஐரோப்பிய நாடொன்றின் பிடிவாதம்... ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகள் நிறுத்தம்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகள் உறுப்பு நாடொன்றின் பிடிவாதத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிடிவாதம்
அத்துடன் உக்ரைனுக்கான 90 பில்லியன் யூரோ கடனுதவியும் முடக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் இன்று காலை இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகள் தொடர்பில் ஹங்கேரி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தடைகளை உறுதி செய்வதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
அதை எப்படி முன்னெடுப்பது என்பதற்கான வழிகளையும் நாங்கள் தேடுகிறோம். ஆனால் ஹங்கேரியிடமிருந்து சில வலுவான வாதங்களைக் கேட்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இந்த முடிவில் இருந்து விலகுவார்கள் என்பது உறுதியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ள நிலையில், ஹங்கேரி அதைக் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் உக்ரைனுக்கான 90 பில்லியன் யூரோ கடனுதவியையும் முடக்க வைத்தது.
ட்ருஷ்பா குழாய்வழியைப் பயன்படுத்தி எண்ணெய் போக்குவரத்து தொடர்பாக உக்ரைனுடனான அதன் அதிகரித்து வரும் சர்ச்சையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் என தெரிய வந்துள்ளது.

வெளியேற்ற சூழ்ச்சி
ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ தெரிவிக்கையில், உக்ரைன் ட்ருஷ்பா குழாய் வழியாக ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வரை, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் முக்கியமான முடிவுகளை முன்னோக்கி நகர்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

உக்ரைனுக்கு எதிரான இந்த நடவடிக்கையானது ஹங்கேரியின் முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்படுகிறது.
தேர்தலினூடாக ஹங்கேரியின் ரஷ்ய சார்பு பிரதமர் விக்டர் ஓர்பன் 16 ஆண்டுகள் நீடித்த ஆட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர் உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

ஹங்கேரியின் எதிர்க்கட்சி தலைவர் Péter Magyar-ஐ விடவும் 10 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளார் ரஷ்யா மற்றும் ட்ரம்ப் ஆதரவு விக்டர் ஓர்பன்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் கூட்டு சேர்ந்து தம்மை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்வதாகவும் விக்டர் ஓர்பன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |