உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வட கொரியர்களின் எண்ணிக்கை... புதிய நினைவுச்சின்னத்தால் அம்பலம்
உக்ரைனுக்கு எதிராக போரிட்ட வட கொரிய இராணுவத்தினர் சுமார் 2300 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வட கொரியாவில் எழுப்பப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தால் அம்பலமாகியுள்ளது.
புதிய நினைவிடம்
இதுவரை உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் எண்ணிக்கை வெளிவராத நிலையில், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வட கொரியாவில் எழுப்பப்பட்டுள்ள ஒரு புதிய நினைவிடத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணையில் இந்த எண்ணிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2024-இல் ரஷ்யாவின் குர்ஸ்கில் உக்ரைன் படைகள் திடீர் ஊடுருவலை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மேற்கு குர்ஸ்கின் சில பகுதிகளை மீட்டெடுக்க உதவும் வகையில், குறைந்தது 11,000 வட கொரியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாக தென் கொரியா மதிப்பிடுகிறது.
இதனிடையே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், போரில் மரணமடைந்த வீரர்களுக்கு முன்னதாகப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும், வட கொரியா இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு ஈடாக மாஸ்கோவிலிருந்து உணவு, பணம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வட கொரியா பெற்றுள்ளது.
உக்ரைனில் மரணமடைந்துள்ள வீரர்களுக்காக ஹ்வாசோங் மாவட்டத்தில் புதிய நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், பெயர்கள் பொறிக்கப்பட்ட 30 மீற்றர் (98 அடி) நீளமுள்ள இரண்டு நினைவுச் சுவர்கள், ஒரு கட்டிடம் மற்றும் ஒரு கல்லறைத் தோட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு சுவரும் சுமார் 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேற்பகுதியில் சாம்பல் நிறக் கல் கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் ஒன்பதில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் சுமார் 16 பத்திகள் உள்ளன.

11,000 இராணுவ வீரர்கள்
16 பத்திகளையும் 9 பிரிவுகளையும் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு சுவரிலும் 1,152 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன; இதன் மூலம், நினைவுச் சுவர்கள் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 2,304 பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2025-இல், சுமார் 2,000 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 2,700 பேர் காயமடைந்ததாகவும் தென் கொரியாவின் NIS என்ற உளவு முகமை தெரிவித்தது.

ஆனால் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாக மதிப்பிடப்பட்ட 11,000 இராணுவ வீரர்களில் சுமார் 6,000 பேர் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகக் கூறி, NIS புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், குர்ஸ்கில் உயிரிழந்த அனைத்து வட கொரிய வீரர்களின் பெயர்களும் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்றே ஆய்வாளர் கிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |