அமெரிக்காவின் ஓஹியோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 12 பேர் படுகாயம்
அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற திருவிழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஓஹியோ திருவிழாவில் துப்பாக்கிச்சூடு
ஓஹியோவின் டொலிடோவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஓல்ட் வெஸ்ட் எண்ட்(Old West End) திருவிழாவில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 16 வயது முதல் 61 வயது வரை உள்ள 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

இதில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் டொலிடோ காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை காவல் ஆணையர் ஜோ, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கைது மற்றும் விசாரணை

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிரமான முயற்சியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும், காயமடைந்தவர்களை பணியாளர்கள் மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விவரம் அறிந்தவர்கள் உடனடியாக டொலிடோ காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |