ஹார்முஸ் விவகாரம்... எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும், கப்பல் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் அபாயத்தை யார் எதிர்கொள்வது என்பதில் கப்பல் உரிமையாளர்களும் வாடகைக்கு எடுப்பவர்களும் உடன்பட முடியாமல் திணறுவதால், குறைவான கப்பல் முன்பதிவுகளே நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தங்கள் எட்டப்படாமல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி ஏழு வாரங்கள் ஆகியும், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பொருட்களைக் கொண்டு செல்வது பெரும்பாலான நிறுவனங்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு அபாயகரமானதாகவே உள்ளது.

இந்த நிலையில், பாரசீக வளைகுடாவிற்குள் எண்ணெய் கையிருப்பு உள்ள குறைந்தபட்சம் இரண்டு எண்ணெய் நிறுவனங்கள், கப்பல் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் சரக்கு ஏற்றுவதையும், ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து தாமதமின்றி தங்கள் இலக்கைச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அண்மைய நாட்களில் எண்ணெய்க் கப்பல்களை வாடகைக்கு எடுக்க முயன்றுள்ளன.
ஆனால், ஒரு கப்பல் உரிமையாளரும் பல கப்பல் தரகர்களும் அப்படியான கோரிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறியுள்ளனர். சில உரிமையாளர்கள், கப்பல் வாடகைதாரர்களுக்குச் சுமையாக இருக்கும் நிபந்தனைகளையும் கோருகின்றனர் எனக் கப்பல் தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளி காரணமாக, பாரசீக வளைகுடாவிற்குள் எண்ணெய் ஏற்றுவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படாமல் உள்ளது.
இரு தரப்பினரும், மற்ற தரப்பே இடர்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆனால் யாரும் தங்கள் நிலையில் இருந்து சற்றும் நகர மறுக்கின்றனர் என லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பல உரிமையாளர்கள் முன்பதிவை ரத்து செய்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய காத்திருப்புக் காலத்திற்கும் பெரிய தொகைகளைக் கேட்கிறார்கள், ஆனால் அது இதுவரை நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளது.
வாடகைக் கட்டணங்கள்
ஈரான் மீதான அச்சம் காரணமாக முன்னர் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆனால் தற்போது ஈரானை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டு அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை மொத்தமாக முடக்கியுள்ளது.
வாடகைதாரர்களுக்கும் கப்பல் உரிமையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு தணியும் வரை, ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கு சிறிதளவே நம்பிக்கை உள்ளது.

தற்போதைய சூழலில் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயல்பவர், அதற்கான பெரும் விலையைக் கொடுக்க நேரிடலாம். கடந்த மாதம், லண்டனில் உள்ள பால்டிக் எக்ஸ்சேஞ்ச், பாரசீக வளைகுடாவிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் கப்பலுக்கான வாடகைக் கட்டணங்களை மதிப்பிடும்போது, இடர் பிரீமியத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தரகர்களிடம் தெரிவித்தது.
வெளியான தகவலின் அடிப்படையில், போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 160,000 டொலராக இருந்த கட்டணம், தற்போது சுமார் 475,000 டொலராக அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |