PhonePe வாடிக்கையாளர்களுக்கு... பயன்படுத்தாத வாலட்டுக்கு இனி ரூ.100 கட்டணம்
நீண்ட நாட்களாக ஃபோன் பே வாலட்டைப் பயன்படுத்தாமல் இருக்கும் பயனர்களுக்கு நிறுவனம் கட்டணம் விதிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டுக்கும்
தொடர்ந்து 365 நாட்கள் தங்களுடைய ஃபோன் பே வாலட் மூலம் எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அந்த வாலட் செயலற்றதாக வகைப்படுத்தப்படும்.

இவ்வாறு கருதப்படும் வாலட்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் 100 ரூபாய் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும்.
ஃபோன் பே செயலியை லாகின் செய்து, யுபிஐ பரிவர்த்தனை செய்வது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, பில் கட்டணங்கள் செலுத்துவது, கிரெடிட் கார்டு லோன், இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்டவை வாலட் ஆக்டிவிட்டியாக கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் வாலட் செயல்பாடும் வெவ்வேறு. உங்கள் வாலட்டை ஆக்டிவாக வைத்திருக்க ஃபோன் பே வாலட் மூலம் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
ஒரு பரிவர்த்தனையாவது
பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பே அந்தந்த பயனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த நோட்டீஸ் காலத்திற்குள் ஃபோன் பே வாலட் மூலம் ஒரு பரிவர்த்தனையாவது செய்து விட்டால் கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதன் பின் வாலட் மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாக கருதப்படும். அதிலிருந்து 365 நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் வாலட்டில் பணம் இருந்தால் 100 ரூபாய் அதிலிருந்து கழிக்கப்படும்.

வாலட்டில் 100 ரூபாயை விட குறைவான தொகை இருந்தால் அதில் இருக்கும் தொகை பிடித்தம் செய்யப்பட்டு பேலன்ஸ் ஜீரோவாக மாற்றப்படும்.
ஆனால் இதற்காக உங்களுடைய வாலெட் கணக்கு மைனஸ் ஆகாது என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க, ஒரு முறையாவது ஃபோன் பே வாலட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யுங்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |