இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்?
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், மக்களிடையே பணத்தை பயன்படுத்தும் தேவை உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பிளாஸ்டிக் பணத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் பிளாஸ்டிக் பணம்
2024 - 25 நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ரூ.5,101.4 கோடி செலவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.6,372.8 கோடியாக உள்ளது.

ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான தேவை அதிகரித்ததே இதற்குக் முக்கியக் காரணமாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதே போல், கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை வழங்குவது ரிசர்வ் வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
2025 நிதியாண்டில் 23.8 பில்லியன் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. திரும்ப பெறப்பட்ட நோட்டுகளில் பெரும்பாலானவை ரூ.500, ரூ.100 நோட்டுகளாகும்.
இந்நிலையில், இதற்கு மாற்றாக பாலிமர் நோட்டுகள் என அழைக்கப்படும் பிளாஸ்டிக் நோட்டுகளை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கு ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும், அது காகித ரூபாய் நோட்டுகளை விட அதிக காலம் நீடித்து உழைக்கும் தன்மை உடையது.

இவை கிரெடிட் கார்டுகளைப் போலக் கடினமாக இல்லாமல், காகித பணத்தைப் போலவே லேசானதாகவும், மடிக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படும். தண்ணீரில் நனையாத, அழுக்கு மற்றும் கிழிதல் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கும்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் ரூ.10 பாலிமர் நோட்டுகள் சோதனை செய்யப்பட்டன.
ஆனால், அப்போது நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இந்த நோட்டுகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
குறிப்பிட்ட அந்தத் தொழில்நுட்பம் இனி ஒரு சவாலாக இல்லை என்றும், ஏடிஎம்கள் அத்தகைய நோட்டுகளை அடையாளம் காண்பதை உறுதிசெய்யும் வகையில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதுவரை உலகில் சுமார் 60 நாடுகள் பிளாஸ்டிக் பணத்தாள்களைப் புழக்கத்திற்கு அமுல்படுத்தியுள்ளன. 1988 ஆம் ஆண்டில் முதல் நாடாக அவுஸ்திரேலியா பிளாஸ்டிக் பணத்தாள்களை அறிமுகப்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |