புதிய சாதனை எண்ணிக்கை... சவுதி அரேபியாவைக் கடுமையாகக் கண்டித்த மனித உரிமை அமைப்புகள்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் சவுதி அரேபியா தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
இரத்தக்களரி நிறைந்த ஆண்டு
பிரித்தானியாவைச் சேர்ந்த Reprieve என்ற குழுவினர் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, 2024ல் இது 345 என பதிவாகியிருந்தது.

மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து, இதுவே சவுதி அரேபியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட மிகவும் இரத்தக்களரி நிறைந்த ஆண்டு என்று Reprieve பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கைதிகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களும் அடங்குவர்.
மட்டுமின்றி, இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் போராட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நேரத்தில் சிறுவர்களாக இருந்த இரண்டு இளைஞர்களும் அடங்குவர். ஐந்து பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர், ஆபத்தில்லாத போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்; இது சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு முரணானது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
மரண தண்டனைக்கு இலக்கானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என்றும், சவுதி அரேபியாவில் அவர்கள் போதைப்பொருள் மீதான போரின் ஒரு பகுதியாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சவுதி குற்றவியல் நீதி அமைப்பில் சித்திரவதை மற்றும் கட்டாய வாக்குமூலங்கள் ஒரு பரவலான நிகழ்வாக உள்ளன என்றே Reprieve குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான மரண தண்டனைக்கு எதிரானப் பிரிவுத் தலைவர் Jeed Basyouni தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற தற்காலிகத் தடையை முடிவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து, போதைப்பொருள் தொடர்பான மரண தண்டனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
மனித உரிமைகள் அத்துமீறல்
கடந்த 2017ல் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்ட சவுதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான முகமது பின் சல்மான், கடந்த சில ஆண்டுகளில், சமூகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், அதே நேரத்தில் விமர்சனங்களையும் ஒடுக்கி, நாட்டை ஆழமாக மாற்றியுள்ளார்.
மட்டுமின்றி, எண்ணெயைச் சார்ந்திருக்கும் தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், அவர் சவுதி அரேபியாவை வெளி உலகிற்குத் திறந்துவிட்டுள்ளார், மதக் காவல்துறையினரைத் தெருக்களிலிருந்து அகற்றியுள்ளார், மேலும் பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதித்துள்ளார்.

இருப்பினும், சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் அத்துமீறல் என்பது மிகவும் மோசமாகவே உள்ளது. ரிப்ரீவ் அமைப்பின்படி, தூக்கிலிடப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழக்கமாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை, அல்லது சடலம் ஒப்படைக்கப்படுவதில்லை, அல்லது அவர்கள் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றியும் தெரிவிக்கப்படுவதில்லை.
மட்டுமின்றி, சவுதி அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றும் முறையை வெளிப்படுத்துவதில்லை, இருப்பினும் அது தலையைத் துண்டித்தல் அல்லது துப்பாக்கிச் சூட்டுக் கொல்லுதல் ஆகிய இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |