கடலின் நடுவே பாதை உருவாகும் அதிசயம் - பின்னணியில் அறிவியல் காரணம்
தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு இரு முறை ஒரு மணி நேரத்திற்கு கடலின் நடுவே மக்கள் நடந்து செல்லும் வகையில் இயற்கையாக பாதை உருவாகிறது.
கடலின் நடுவே உருவாகும் பாதை
தென் கொரியாவின் தென்மேற்குக் கடற்கரையோரத்தில், தென் ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள ஜிண்டோ தீவுக்கும், மோடோ மற்றும் சியோடோ ஆகிய சிறிய தீவுகளுக்கும் இடையேயான கடற்பரப்பில் ஜிண்டோ அதிசயம் நிகழ்கிறது.

இந்த தீவுகளுக்கு இடையேயான தூரம், சுமார் 2.8 கிலோமீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் உள்ளது. வழக்கமாக இந்த பகுதி கடல் நீரால் மூடப்பட்டிருக்கும்.
மார்ச் அல்லது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒரு மணி நேரத்திற்க்கு மட்டும் இந்த கடலின் நடுவே நீர் விலகி இயற்கையாவே பாதை உருவாகிறது.
அந்த பகுதி மக்கள் அந்த சேற்று நிலங்களில் நடந்து சென்று, சிப்பிகள், நண்டுகள் அல்லது சிறிய ஆக்டோபஸ்களைத் தோண்டி எடுக்கிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் அலைகள் வரத்துவங்கியவுடன் பாதை மறைந்து விடும் என்பதால், அதிகாரிகள் மக்களை எச்சரித்து அலை வரும் முன்னர் வெளியேற்றி விடுவார்கள்.
இதில் உள்ளூர் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய உணவுகளுடன், ஜிண்டோ அற்புதக் கடல் சாலைத் திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டு இதனை காண விரும்பும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு வரும் வகையில், இதற்கான திகதி முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெற்று உள்ளது.
அறிவியல் காரணம்
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் துல்லியமான நிலைகளால் உருவாக்கப்படும் பெரிய அலை வேறுபாட்டின் காரணமாகவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

சில பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில், இப்பகுதியில் குறைந்த உயரமுள்ள அலைகளை உருவாக்கும் அளவுக்கு ஈர்ப்பு விசை வலுவாக இருக்கும்.
ஜிண்டோ கடற்கரையின் நில அமைப்பு, அதன் ஆழமற்ற கடலடித் தளம், மென்மையான சரிவு காரணமாக கடலடித் தளம் நீர் மட்டத்திற்கு மேலே உயர்ந்து, ஒரு நிலப் பாலத்தை உருவாக்குகிறது.
புராணக் கதை
இவ்வாறு அறிவியல் காரணம் இருக்கும் நிலையில், அந்த மக்கள் ஒரு புராணக் கதையை நம்புகிறார்கள்.
அதன்படி, நெடுங்காலத்திற்கு முன்பு, ஜிண்டோ தீவில் புலிகளால் துரத்தப்பட்டு சோர்வடைந்த மக்கள், அந்த நிலத்தை விட்டுத் தப்பி ஓடினர். ஆனால் ப்பியோங் என்ற வயதான பெண்ணை மறந்துவிட்டனர்.

தன்னைக் காப்பாற்றி, தன் குடும்பத்துடன் மீண்டும் இணைக்குமாறு அந்த வயதான பெண் கடல் கடவுளான யோங்வாங்கிடம் வேண்டினாள். அந்தச் சமயத்தில், கடல் கடவுளான யோங்வாங், ஒரு குறிப்பிட்ட நாளில் கடல் திறக்கும் என்று அவளிடம் கூறினார்.
அந்த நாட்களில், கிராம மக்கள் தீவுக்கு நடந்து திரும்பிச் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த நிகழ்வு, 1970 களில் தென் கொரியாவிற்கான பிரான்ஸ் தூதர், இதனை அறிந்து வெளிப்படுத்திய போது சர்வதேச கவனத்தை பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |