கருங்கடலில் ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: துருக்கி அருகே சம்பவம்
ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் மீது துருக்கியின் போஸ்பரஸ் நீரிணைக்கு அருகே கருங்கடலில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
27 ஊழியர்களும் பத்திரம்
சமீபத்திய மாதங்களில், ரஷ்ய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் மேற்கத்திய நாடுகளால் தடைசெய்யப்பட்ட கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களில் இதுவும் ஒன்று என அமைச்சர் அப்துல்காதிர் உரலோக்லு தெரிவித்துள்ளார்.

Altura என்ற அந்த கப்பலில் இருந்து 27 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்த பகுதியானது போஸ்பரஸ் நீரிணையில் இருந்து 18 கடல் மைல் தொலைவு என்றே குறிப்பிடுகின்றனர்.
போஸ்பரஸ் நீரிணையானது கருங்கடலை மர்மாரா மற்றும் மத்தியதரைக் கடலுடன் இணைக்கும் ஒரு முக்கிய சரக்குக் கப்பல் வழித்தடமாகும். துருக்கிய கடல் எல்லைக்கு சற்று வெளியே நடந்த இந்தத் தாக்குதல் சம்பவமானது,
சியரா லியோன் கொடியுடன் ரஷ்ய எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பலின் இயந்திர அறையைச் செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்திருக்கலாம் என்றே அமைசசர் உரலோக்லு தெரிவித்துள்ளார்.
1 மில்லியன் பீப்பாய்
அந்தக் கப்பல் சுமார் 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகவும், அது ஏறக்குறைய முழுமையாக ஏற்றப்பட்டிருந்ததாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலானது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் உடன் பிற நாடுகளும் கருங்கடலைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில், கருங்கடலில் ரஷ்யா நோக்கிச் சென்ற எண்ணெய்க் கப்பல்களை உக்ரேனிய கடல் ட்ரோன்கள் தாக்கியதைத் தொடர்ந்து, கப்பல் காப்பீட்டு விகிதங்கள் உயர்ந்தன.
இதனால், ரஷ்யா பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியதுடன், நேட்டோ உறுப்பு நாடான துருக்கி அமைதி காக்குமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |