ரஷ்யா, இஸ்ரேலை அடுத்து... சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் சவுதி அரேபியா
மத்திய ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராகக் கடல் வழியாகவும், சாத்தியமான தரை வழியாகவும் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த சவுதி அரேபியா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆயத்த நடவடிக்கை
தெற்கு செங்கடல் வழியாக நடைபெறும் தனது எண்ணெய் ஏற்றுமதியின் மீதான ஹவுதிகளின் இறுக்கமான பிடியை உடைக்கும் முயற்சியாக சவுதி அரேபியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஏமனின் கிழக்குப் பகுதியிலிருந்து சவுதிப் படைகள் வெளியேறுவது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இது ஒரு தரைவழித் தாக்குதலுக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் என்றே ஏமன் தரப்பு நம்புகிறது.
இதனிடையே, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரு கடற்படைக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சில நாடுகள் தவிர்த்து, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, சூடான் மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட 14 நாடுகள், பன்னாட்டு கடல்சார் தற்காப்புக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஏமனின் தலைநகரான சனா மற்றும் அதன் செங்கடல் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள், சவுதி அரேபியக் கப்பல்களுக்கு எதிராகத் தடையை அமுல்படுத்துவதாக ஜூலை 20 அன்று அறிவித்தனர்; ஆனால், செங்கடலில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களின் மீதும் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஹவுதிகள் மறுத்துள்ளனர்.
ஏமன் மீதான தனது முற்றுகையை சவுதி அரேபியா நீக்கியவுடன் தாங்களும் முற்றுகையை நீக்குவதாக ஹவுதிகள் உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், இந்த மோதல் நேரடியாக ஈரான் தொடர்பானது அல்ல என்றும், ஏமனின் எதிர்காலம் சார்ந்தது என்றும் ஹவுதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

ஹவுதிகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா 2015-இல் அந்நாட்டு உள்நாட்டுப் போரில் களமிறங்கியது.
இதனிடையே, செங்கடல் கூட்டமைப்பில் இணையுமாறு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் குழுவிடமும் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
செங்கடலில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 'ஆஸ்பிடிஸ்' (Aspides) எனும் கடற்படைப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது; ஹவுதிகள் மேற்கொண்டுள்ள முற்றுகை பொதுவானதா அல்லது சவுதி அரேபியாவை மட்டுமே குறிவைப்பதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயல்களையும் செங்கடல் பகுதி ஏற்றுமதி மையத்தையும் இணைக்கும் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையங்களைத் தாக்கியதாக ஹவுதிப் படைகள் ஜூலை 25 அன்று தெரிவித்தன.
அரேபியத் தீபகற்பத்தின் மறுபுறம் உள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கத்திற்கு மேலதிகமாக, சவுதி கப்பல் போக்குவரத்திற்குச் செங்கடல் பாதையும் மூடப்பட்டால், அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.
சவுதி அரேபியாவும் ஹவுதிகளும்
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, சவுதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தங்களையும் தங்கள் தொழில் துறையையும் பாதுகாத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப்படுத்த சவுதி அரேபிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை இன்னும் ராஜதந்திர ரீதியாகத் தீர்க்க முடியும் என்று கருதுவதால், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அவர்கள் விரும்பவில்லை.

ஏமன் மீதான கட்டுப்பாட்டிற்காக சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போட்டியிட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அங்கு நிலவி வந்த நிலையற்ற சூழல் நிலைமையை சீர்குலைந்துள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் விவகாரத்தில் காஸா பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் கொடூரமானத் தாக்குதல்களை முன்னெடுத்து, தற்போது ஒரு போர் நிறுத்தத்தில் தாக்குதலின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், 2022ல் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் தற்போதும் போரிட்டு வருகிறது. அந்த வரிசையில் சவுதி அரேபியாவும் ஏமன் மீது சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |