ஈரானுடன் போருக்குத் தயாராகும் சவுதியும் ஐக்கிய அரபு அமீரகமும்
ஈரானுடன் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் போருக்கு நெருங்குவதாக வெளியான தகவல், மிக விரைவில் மத்திய கிழக்கு மிக மோசமான கட்டத்திற்கு நகர்வதாகவே கூறுகின்றனர்.
நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு
தங்களது தளங்கள் நீண்டகால எதிரியைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட முடியாது என்று முன்னதாகக் கூறியிருந்த சவுதி அரேபியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கிங் ஃபஹத் விமானத் தளத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது.

அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானுக்குச் சொந்தமான ஒரு மருத்துவமனை மற்றும் ஒரு மன்றத்தையும் மூடியுள்ளது. இதனிடையே, வெளியான காணொளி ஒன்றில், ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல் பஹ்ரைனில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆனால், பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடமிருந்து உதவி கிடைக்கிறதா என்பதைத் தெரிவிக்க அமெரிக்க இராணுவம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அருகிலுள்ள பல நாடுகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி வரும் ஈரான் மீது தங்களுக்கு விரக்தி அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஈரானிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலைக் கண்டித்ததை அடுத்து, இனி எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் கூறியது.

பேச்சுவார்த்தை நடந்தது
இதனிடையே, ஈரானுடன் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடத்தியதாகக் குறிப்பிட்டு, அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் திங்களன்று அறிவித்தார்.
ஆனால், ஈரானில் யார் யாருடன் பேச்சுவார்த்தை நடந்தது, என்ன வகையான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல் எதையும் ட்ரம்ப் வெளியிடவில்லை.

ஈரான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை தொடர்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்திய நாட்களில் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகவும், ஆனால் ஈரான் நிர்வாகம் அந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் தொடங்கப்பட்ட இந்தப் போரில் தற்போது தனியாக சிக்கியுள்ள ட்ரம்ப், வெளியேற முடியாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை பேசி வருவதாகவே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |