நீர்வீழ்ச்சியிலிருந்து இரத்தம் போல் கொட்டும் நீர்: அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ள உண்மை
அண்டார்டிகாவிலுள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக அறிவியலாளர்களை வியப்பிலாழ்த்திவந்தது.
இரத்த நீர்வீழ்ச்சி
பனிப்பாறையிலிருந்து கொட்டும் நீர் இரத்தம் போலவே காட்சியளிப்பதால், அந்த நீர்வீழ்ச்சி இரத்த நீர்வீழ்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக, அந்த நீரில் சிவப்பு நிற நுண்ணுயிரி ஒன்று அதிகம் இருப்பதால் அந்த நீர் சிவப்பாக இருப்பதாக கருதப்பட்டது.
வியப்பூட்டும் இயற்கையின் அதிசயம்
இந்நிலையில், அந்த நீர்வீழ்ச்சி ஏன் இரத்தம் போல் காணப்படுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, அந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பனிப்பாறையின் கீழ், சுமார் 400 மீற்றர் ஆழத்தில், 1.5 மில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியோ, காற்றோ படாமல் உறைந்திருந்த நீரில், இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ளது.

இந்த உப்பு மிகுந்த நீர், பனிப்பாறையின் வெடிப்புகள் வழியாக வெளியேறும்போது, அதிலுள்ள இரும்பு, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரியும்போது, இரும்பு துருப்பிடிப்பதுபோல (Rusting process), இந்த நீரிலுள்ள இரும்பு சிவப்பு நிறமாக மாறுகிறது.
அதனால்தான், அந்த நீர்வீழ்ச்சி இரத்தம்போல சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது.
இந்த இரத்த நீர்வீழ்ச்சி காணப்படுவது குறித்த விடயங்களை முதலில் ஆவணப்படுத்தியவர், அவுஸ்திரேலிய அறிவியலாளரான தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவர்.
அதனால், அவர் நினைவாக அந்த பனிப்பாறை டெய்லர் பனிப்பாறை என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |