சிலி நாட்டில் பயங்கர காட்டுத் தீ: 1000க்கும் மேற்பட்டோர் காயம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கரமான காட்டுத் தீயில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீ
தென் அமெரிக்க நாடான சிலியின் பயோபியோ, நூபல் மற்றும் அரவுக்கானியா (Biobio, Nuble and Araucania) ஆகிய தெற்குப்புற கிராமங்களின் காட்டுப் பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவ தொடங்கியது.
தெற்கு அரைக்கோளத்தின் கோடை கால வெப்ப அலைகளின் சிக்கலான விளைவுகளால் இந்த காட்டு தீ ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Chile's wildfires have so far claimed 23 lives — at one point, there were more than 250 fires raging nationwide. pic.twitter.com/20v4KjIUG8
— DW News (@dwnews) February 5, 2023
இந்த பயங்கரமான காட்டுத்தீயில் வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் என இதுவரை 270,000 ஹேக்டேர்(hectares) பகுதிகள் நாசமாக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
சர்வதேச உதவி
சிலி நாட்டில் பரவி வரும் பயங்கரமான காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் குழு ஓயாமல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க சர்வதேச உதவிகளை சிலி அரசாங்கம் நாடியுள்ளது, அதனடிப்படையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும் நிபுணர் தீயணைப்பு குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வரத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டு அதிகாரிகள் வழங்கிய தகவலில், பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பராகுவே, பெரு, போர்ச்சுகல் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடம் இருந்து உதவிகள் வருவதற்கு வசதிகள் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக், காட்டுத் தீ பரவி உள்ள பயோபியோ, நூபல் மற்றும் அரவுக்கானியா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் அவசரகால எச்சரிக்கையை அறிவித்துள்ளார்.
மேலும் காட்டுத் தீயை அணைக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருவதாக தெரிவித்த அவர், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இந்த காட்டுத் தீயை எதிர்த்து போராட ஊக்குவித்தார்.