முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான்
இத்தாலி வீரர் கிரிஷான் கலுகமகே, முழு நேர பீட்சா தயாரிப்பாளராக பணியாற்றி கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.
கிரிஷான் கலுகமகே
2026 T20 உலக கிண்ணத்தில் முதல்முறையாக கலந்து கொண்ட இத்தாலி அணி, நேபாளத்திற்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைபதிவு செய்துள்ளது.

4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய இத்தாலி அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கிரிஷான் கலுகமகே(Crishan Kalugamage) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கிரிஷான் கலுகமகே இலங்கையின் நீர்கொழும்பில் பிறந்து தனது பள்ளிப்படிப்பை அங்கே படித்துள்ளார். பள்ளி அளவிலான கிரிக்கெட் விளையாடிய அவர், அங்கு அவர் 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் நிலைகளில் தனது பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆடியுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் அவர் 16 வயதில் இருக்கும் போது அவரது பெற்றோர் பணி நிமித்தமாக இத்தாலிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இதனால், தனது கிரிக்கெட் வீரர் ஆகும் கனவு முடிவுக்கு வந்தும் விடும் என்று நினைத்து மனம் உடைந்துள்ளார்.

இத்தாலியில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த அவர் அங்குள்ள பள்ளியில் தடகளத்தில் சேர்ந்தார். மேலும், இலங்கை நண்பர்களுடன் இனைந்து, பொழுதுபோக்கிற்காக டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
சாதாரண கிரிக்கெட்டாக தொடங்கியது, 2016 காலத்தில் இத்தாலியின் பழமையான கிளப்புகளில் ஒன்றான ரோமா கிரிக்கெட் கிளப்பில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை வடிவமைத்தது.
பீட்சா தயாரிப்பாளர்
திங்கள் முதல் சனிக்கிழமை வரை லூக்காவில் உள்ள லா விட்டா பிஸ்ஸேரியாவில் பீட்சா தயாரிப்பவராக பணிபுரிந்துள்ளர். ஞாயிற்றுக்கிழமைகளில், கிரிக்கெட் பயிற்சிக்காக ரோம் நகருக்கு பயணம் செய்துள்ளார்.
இத்தாலி ஏ அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதலில் வேகப்பந்து வீச்சாளராக ஆட தொடங்கிய அவர் அதிகளவு காயங்கள் ஏற்பட்டதால் சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.

2022 ஆம் ஆண்டில் கிரீஸ் அணிக்கு எதிரான T20 போட்டியின் மூலம் இத்தாலி தேசிய அணியில் இடம் பிடித்தார்.
T20 உலககிண்ணத்தில் ஆடுவது குறித்து பேசிய கிரிஷான் கலுகமகே, "உலகக் கிண்ணத்திற்கு நாங்கள் தகுதி பெற்றபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
உலகக் கிண்ணத்தில் விளையாடுவது எங்களுக்கு ஒரு கனவு என்பதால் எங்களில் சிலர் அழுதனர். மேலும் இது இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதால் எனக்கு இரட்டிப்பு உணர்ச்சிவசப்பட்டது.
உலகக்கிண்ணத்தின் முதல் ஆட்டத்தின் போது இத்தாலிய கீதம் இசைக்கப்பட்டபோது, நான் மிகவும் பெருமைப்பட்டேன். ஏனென்றால் நான் அணியும் சட்டையை மதிக்க வேண்டும் என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போது, எனது முக்கிய வேலை உணவகத்தில் உள்ளது. எதிர்காலத்தில், அது கிரிக்கெட் மட்டுமே என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ணம் தொடங்குவதற்கு முன்பு தனது திறமையை மேம்படுத்த தனது தாய் நாடான இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு வலை பந்து வீச்சாளராக பயிற்சி பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |