இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கொழும்புவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ஷிகார் தவான் 13 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய போது ப்ரித்வி ஷா 49 ஓட்டங்களில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்களிலும், மணீஷ் பாண்டே 11 ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, சூர்யகுமார் யாதவ் ஓரளவிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ஓட்டங்களில் வெளியேற, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்திக் பாண்ட்யா 19 ஓட்டங்களில் அவுட்டாக, இந்திய அணி இறுதியாக 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அகிலா தனஞ்சியா மற்றும் பிரவின் ஜெயவிக்ரமா தல மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 226 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான மினோட் பனுக்கா 7 ஓட்டங்களில் வெளியேற, மூன்றாவது வீரராக வந்த பனுகா ராஜபக்சே, மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இரண்டு பேருமே இந்திய அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக எதிர்கொண்டனர். 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த இலங்கை அணி, அடுத்து 144 ஓட்டங்கள் எடுத்த போது, பனுகா ராஜபக்சே 56 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.
அடுத்து வந்த தனஞ்சிய டி சில்வா 2 ஓட்டங்கள், சரித் அஷலன்கா 24, தசுன் ஷனகா டக் அவுட் ஆக, தனி ஒருவனாக அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
அவரும் கடைசி கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவை என்ற போது 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாகுல் சஹார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சை பனுகா ராஜபக்சே(65) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ(76) சிறப்பாக எதிர் கொண்டு, இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய 2-1 என்று கைப்பற்றி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளது.
மேலும், இலங்கை அணி சமீபகாலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளானது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த வெற்றி அமைந்துள்ளதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.