ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க ஸ்டார்மரும் மேக்ரானும்... கண்ணிவெடிகளை அகற்ற திட்டம்
சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்கவும், நட்பு நாடுகளுடன் இணைந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் தொடங்குவதாகவும் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியாவும் பிரான்சும்
ஈரான் மீதான போரை அடுத்து, கப்பல் போக்குவரத்து முடங்கியிருந்த ஹார்முஸ் நீரிணையில் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்க உள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும், வர்த்தக போக்குவரத்தை மீட்டெடுக்கவும், விண்ணை முட்டும் உலகளாவிய செலவுகளைக் குறைக்கவும் உதவுவதாக அறிவித்துள்ளன.
இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க உதவுவதற்காக ஐரோப்பா தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
லெபனானில் சமாதானத்தை ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் உதவியுள்ள நிலையில், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்த ஈரானின் சார்பு குழுவான ஹிஸ்புல்லாவை, போர் நிறுத்தத்தை அடுத்து அத்துமீற வேண்டாம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுடன் இணையமூடாக சந்திப்பு ஒன்றை ஸ்டார்மர் மேற்கொண்டுள்ளார். அதில் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் சீராக இயங்கச் செய்வது உலகளாவிய பொறுப்பு என்று ஸ்டார்மர் உலகத் தலைவர்களிடம் கூறினார். ஈரான் மீதான போரை அடுத்து, ட்ரோன் தாக்குதலுக்கு அச்சப்பட்டு ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது.

கடுமையாகச் சாடி
மட்டுமின்றி, எதிரிகளுக்கு ஹார்முஸ் நீரிணையில் அனுமதி இல்லை என அறிவித்த ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடியாக கடலடியில் கண்ணிவெடிகளைப் பதித்தது.
ஆனால் சமீப நாட்களில், ஈரானிடம் பேச்சுவார்த்தைகள் மூலமாக கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், கண்ணிவெடிகளை அகற்றவும் ட்ரம்ப் உதவியுள்ளார். ஸ்டார்மரும் பிற கூட்டாளிகளும் வார இறுதியில் ட்ரம்ப்பின் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க மறுத்தனர்.

இதனையடுத்து ட்ரம்ப் தமது ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ஐரோப்பாவையும் நேட்டோவையும் கடுமையாகச் சாடி பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் மூலம் சுமார் 200 பில்லியன் பவுண்டு மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது, 26 ஆண்டுகாலக் கடுமையான உலகளாவிய பொருளாதாரத் தடைகளுக்கு இணையானது என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |