போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் - இலைதழைகளை உண்டு வாழும் மக்கள்
போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக மக்கள் இலைதழைகளை உண்டு வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் போர்
வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் கடந்த 2023 ஏப்ரலில், சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது.

இந்த போர் 3வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
12 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானர்.
இலை தழைகளை உண்ணும் மக்கள்
மேலும், மோதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு டார்ஃபூர் மற்றும் தெற்கு கோர்டோஃபான் ஆகிய மாநிலங்களில், மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது என அரசு சாரா அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும், அவர்கள் பல நாட்கள் உணவைத் தவிர்க்கிறார்கள் என்றும், உயிர் பிழைப்பதற்காகப் பலர் இலைகளையும் கால்நடைத் தீவனத்தையும் உண்ணத் தொடங்கியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
5 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம் பஞ்ச வரம்பை தாண்டிவிட்டது. இதன் காரணமாக இங்குள்ள குழந்தைகள் எலும்பும் தோலுமாக தோற்றமளிக்கின்றன.
இந்த போரில் பட்டினியை கருவியாக பயன்படுத்த வேண்டுமென்றே விவசாய நிலங்கள், சந்தைகள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. உணவு தேடி வெளியே செல்லும் பெண்கள், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |