கார் விபத்தை ஏற்படுத்தி பெண் துணை ஜனாதிபதி ஒருவரைக் கொல்ல சீனா சதி
தைவானின் துணை ஜனாதிபதி சியாவோ பி-கிம் கடந்த ஆண்டு பிராகாவிற்குச் சென்றபோது, கார் விபத்தை ஏற்படுத்தி அவரைக் கொல்ல சீனா சதி செய்தாக செக் இராணுவ உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
கார் விபத்து ஏற்படுத்த
சீனாவால் தம்மை எந்தவகையிலும் மிரட்ட முடியாது என்றே, இந்த தகவல் வெளியான நிலையில் துணை ஜனாதிபதி சியாவோ பி-கிம் தெரிவித்துள்ளார்.
சியாவோ மார்ச் 2024 ல் செக் குடியரசிற்கு விஜயம் செய்திருந்தார். செக் குடியரசு தைவானுடன் உத்தியோகப்பூர்வ தூதரக உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரு சீன தூதர் தைவான் துணை ஜனாதிபதி சியாவோவின் காரைப் பின்தொடர்ந்தபோது போக்குவரத்து சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக செக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மட்டுமின்றி, துணை ஜனாதிபதி சியாவோவை மிரட்டும் வகையில் கார் விபத்து ஒன்றையும் ஏற்படுத்த சீனர்கள் திட்டமிட்டிருந்ததாக செக் ஒன்லைன் செய்தி ஊடகம் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
தம்மை அச்சுறுத்தாது
இந்த நிலையில், செக் இராணுவ உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலுக்கு பதிலளிக்கும் வகையில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சியாவோ, தமது பிராகாவ் பயணம் சிறப்பாக அமைந்தது என்றும், செக் அதிகாரிகளின் விருந்தோம்பல் மற்றும் தனது பாதுகாப்பை உறுதி செய்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஒருபோதும் தம்மை அச்சுறுத்தாது என்றும், தைவானின் விருப்பங்களை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டுசெல்வது தமது பொறுப்பு என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், தம்மீது நடத்தப்படவிருந்த தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பிய சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிராகாவில் உள்ள சீன தூதர்கள் தூதரக விதிகளை மீறும் செயலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செக் இராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |