ஈரானின் ஏவுகணை மழையில் இருந்து இஸ்ரேலை காக்க ரூ 10,000 கோடி செலவிட்ட ட்ரம்ப்
ஈரானின் உக்கிரமான ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா தனது மொத்தமுள்ள மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை பயன்படுத்தியுள்ளது.
ரூ 10,000 கோடி
மொத்தம் 12 நாட்கள் நீண்ட மோதலில் ஈரானின் உக்கிரமான ஏவுகணை மழையை சமாளிக்க, அமெரிக்கா தனது THAAD எனும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை பயன்படுத்தியது.
மிலிட்டரி வாட்ச் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஈரான் - இஸ்ரேல் மோதலின் போது 60 முதல் 80 முறை இடைமறிக்கும் அமைப்பை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை இடைமறிக்க, அதாவது THAAD அமைப்பை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த 12 நாட்கள் THAAD அமைப்பை பயன்படுத்த அமெரிக்காவின் மொத்த செலவு 810 மில்லியன் முதல் 1.2 பில்லியன் டொலர் ( தோராயமாக இந்திய மதிப்பில் ரூ 10,000 கோடி) வரை இருக்கும் என்றே கூறப்படுகிறது.
2024ல் தான் அமெரிக்கா THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இஸ்ரேலில் மீண்டும் மறுகட்டமைப்பு செய்திருந்தது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் இராணுவ வசதிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது.
Ghadr, Emad, Kheibar Shekan மற்றும் Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரையில் ஈரான் சரமாரியாகப் பயன்படுத்தியது. Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது அமெரிக்காவின் மேம்பட்ட THAAD அமைப்பை பயன்படுத்தியும் இடைமறிப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.
Fattah-1 ஏவுகணையானது மேக் 15 வேகம் வரை பயணிக்கிறது. உண்மையில் ஈரான் மற்றும் வடகொரியாவின் ஏவுகணை பலத்தை சமாளிக்கும் வகையிலேயே THAAD அமைப்பை அமெரிக்கா வடிவமைத்தது.
முடிவுக்கு வந்தது
இந்த இரு நாடுகளும் வழக்கமான அல்லது அணு ஆயுதங்களை ஏவக்கூடிய நடுத்தர மற்றும் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் குவித்து வைத்துள்ளது. மட்டுமின்றி, ஆண்டுக்கு 50 முதல் 60 THAAD அமைப்பையே அமெரிக்கா தயாரிக்கும் நிலையில் உள்ளது.
அதாவது இஸ்ரேலுக்காக 12 நாட்களில் செலவழித்ததை மீண்டும் நிரப்ப பல ஆண்டுகள் ஆகலாம் என்றே மதிப்பிடப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேல் தரப்பில் பாதிப்பு அதிகரிப்பதை உணர்ந்த இரு நாடுகளும் துரிதமாக முடிவெடுத்தது.
இதனையடுத்து அமெரிக்கா வலுக்கட்டாயமாக களமிறங்கி, ஈரான் மீது குண்டு வீசியது. தொடர்ந்து இரு தரப்பினரும் முழுமையான மற்றும் மொத்தமாக போர்நிறுத்தத்தை எட்டியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென்று அறிவித்தார்.
தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்படாத போர் ஒன்றில் இஸ்ரேல் பெரும் சேதத்தை எதிர்கொண்டது.
மேலும், இறுதியில், அமெரிக்க-இஸ்ரேல் இணைந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஈரானை தோற்கடிக்க அல்ல, கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.
ஈரானின் அணு ஆயுத தளங்கள் தாக்கப்பட்டன. இராணுவத் தலைமை அதிர்ந்தது. ஆனால் ஈரானின் ஆட்சியும் அதன் அணு ஆயுத லட்சியமும் அப்படியே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |