மிரட்டல் வேண்டாம்... சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த தகைச்சி
சீனாவின் மிரட்டல் அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தேர்தலுக்குப் பிந்தைய தனது முதல் உரையில் ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்தார்.
மகத்தான வெற்றியுடன்
அத்துடன், பாதுகாப்பு உத்திகளை மாற்றியமைப்பதற்கும், இராணுவ ஏற்றுமதிகள் மீதான தடைகளைத் தளர்த்துவதற்கும், முக்கியமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜப்பானிய பிரதேசத்தை அச்சுறுத்தும் தைவான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஜப்பான் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி பதிலளிக்க நேரிடும் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து, தகைச்சியின் நான்கு மாத பதவிக் காலம் சீனாவுடனான இராஜதந்திர மோதலுடனே நீடித்தது.
இந்த நிலையில், தற்போது கீழ்சபைத் தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சிக்கு திரும்பியுள்ளார் தகைச்சி. அத்துடன், தனது முதல் உரையில், சீனா மற்றும் அதன் பிராந்திய பங்காளிகளிடமிருந்து அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அவர் கருதுவதை எதிர்கொள்வதற்கான ஒரு திட்டத்தையும் தகைச்சி குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஆளும் கூட்டணி தற்போது மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைக் கொண்டிருப்பதால், அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது என்றே கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் அதன் மிகக் கடுமையான மற்றும் சிக்கலான பாதுகாப்பு சூழலை எதிர்கொள்கிறது என குறிப்பிட்டுள்ள தகைச்சி, சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் விரிவடைந்து வருவதையும், ரஷ்யாவுடனான நெருக்கமான பாதுகாப்பு உறவுகளையும், வட கொரியாவின் வளர்ந்து வரும் அணு ஏவுகணைத் திறனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரட்டிப்பாக்குவோம்
மேலும், புதிய பாதுகாப்பு உத்தியை உருவாக்க ஜப்பானின் மூன்று முக்கிய பாதுகாப்பு ஆவணங்களை இந்த ஆண்டு அரசாங்கம் திருத்தும் என்றும், வெளிநாட்டு விற்பனையை விரிவுபடுத்தவும் பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்தவும் இராணுவ ஏற்றுமதி விதிகளை மறுஆய்வு செய்வதை துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் வலுக்கட்டாயமாக அல்லது மிரட்டல் மூலம் தற்போதைய நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள தகைச்சி, மார்ச் மாத இறுதிக்குள் ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக இரட்டிப்பாக்குவோம் என்றார்.
2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணுமின் நிலைய பேரழிவிற்குப் பிறகு செயல்படாமல் இருந்த உலைகளை மீண்டும் தொடங்குவதை விரைவுபடுத்துவதாகவும் தகைச்சி உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |