பெண்களை கணவர் அடிக்க அனுமதி வழங்கியுள்ள நாடு - ஆனால் 2 நிபந்தனைகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் சட்டங்களை இயற்றி வருகின்றனர்.

வயது வந்த பெண்களின் உயர்கல்விக்கு தடை, பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் தடை என தலிபான்கள் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பறித்துள்ளனர்.
பெண்கள் மீதான வன்முறைக்கு அனுமதி
இந்நிலையில், பெண்கள் மீதான வன்முறையை ஆதரிக்கும் வகையில், புதிய 90 பக்க தண்டனைச் சட்டத்தை தலிபான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடாவால் கையொப்பமிடப்பட்ட, தே மகாகுமு ஜசாய் ஒசுல்னாமா(De Mahakumu Jazaai Osulnama) என்ற ஆவணம், ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில், எலும்புகள் உடையாமல் மற்றும் திறந்தவெளி காயங்கள் ஏற்படாத வகையில் கணவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளை தண்டிக்க அனுமதி வழங்குகிறது.
இந்த சட்டப்படி, எலும்பு முறிவுகள் அல்லது காயங்கள் போன்ற வழக்குகளில் கணவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால், மனைவி நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியிடம் காயங்களை காட்டி தான் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஆனால், முழுவதுமாக உடலை மூடி இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கணவர் அல்லது ஆண் பாதுகாவலரை உடன் அழைத்து வர வேண்டும்.

திருமணமான பெண் தனது கணவரின் அனுமதியை பெறாமல் உறவினர்களை சந்திக்க சென்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
2009 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதரவு ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புச் சட்டம் (EVAW) போன்ற முக்கிய பாதுகாப்புகளை இந்த புதிய சட்டம் பறிக்கிறது.
இந்த புதிய சட்டங்கள் பெண்கள் மீதான வன்முறையை சட்டப்பூர்வமாக்குவதாக கூறி பெண் உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதை தடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |