லண்டனில் ரணிலை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்., பிரித்தானிய பொலிஸாரால் பரபரப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டபோது பொலிஸார் தலையிட்ட வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
பிரித்தானியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தலைநகர் லண்டனில் Intercontinental park lane hotel-ல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஓட்டலுக்கு வெளியே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தமிழீழ தேசியக் கொடியுடன் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்த லண்டன் பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்திற்கு பயன்படுத்திய தமிழீழ தேசியக் கொடி தடை செய்யபட்டது என கூறியதாகவும், அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது தடை செய்யப்பட்ட கொடியல்ல எனவும் இது தமிழர்களின் கொடி எனவும் தெரிவித்ததாக்க கூறப்படுகிறது.
பின்னர், இது தொடர்பில் ஆராய்ந்த பொலிஸார் தமிழ் மக்களின் தமிழீழ தேசியக்கொடியை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் வேறு கொடி என நினைத்து தவறாக கூறியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதையடுத்து விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய பொலிஸார் அங்கீகாரம் அளித்ததாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில், இலங்கை ஜனாதிபதி ரணில் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாகவும் அங்கும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |