பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: அதிகரிக்கும் மக்கள் ஆதரவு
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகிறார்கள்.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகத்தை மூட அது அமைந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்துடன், அதாவது, மார்ச் மாதத்துடன் குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருகிறது.
உணவகத்தைக் காப்பாற்றுவதற்காக மன்னர் சார்லசிடம் அளிப்பதற்காக உருவாக்கியுள்ள புகார் மனு ஒன்றில் 20,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை பாதுகாக்க ஆதரவு தருமாறும், இந்திய பிரித்தானிய கலாச்சார உறவுகளின் அடையாளமான அந்த உணவகத்தை காப்பாற்றுமாறும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், Crown Estate தன் முடிவை மாற்றுவதுபோல் தெரியவில்லை.
வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சார்லி சாப்ளின், வின்ஸ்டன் சர்ச்சில், இளவரசி ஆன், டேவிட் கேமரோன், ஜோர்டான் மன்னரான அப்துல்லா ஆகியோரை உபசரித்த பாரம்பரியம் கொண்ட உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |