டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் - ஏலத்தில் சாதனை விலை
உலகின் மிகப்பெரிய கடல் விபத்துகளில் ஒன்றான RMS டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம் இன்னும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த விபத்தில் உயிர் பிழைத்த பயணியொருவரின் லைஃப் ஜாக்கெட் சமீபத்தில் ஏலத்தில் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த ஜாக்கெட், லாரா மேபல் பிராங்கடெல்லி (Laura Mabel Francatelli) என்ற முதல் தர பயணியிடம் இருந்தது.
அவர் பிரபலமான ஃபேஷன் டிசைனர் லூசி டஃப் கார்டன் மற்றும் அவரது கணவர் காஸ்மோ டஃப் கார்டனுடன் பயணம் செய்தார்.

மூவரும் லைஃப் படகு எண் 1-ல் உயிர் பிழைத்தனர். அந்த படகு 40 பேரை ஏற்றக்கூடியதாக இருந்தும், 12 பேரை மட்டுமே ஏற்றியதால் பின்னர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த ஜாக்கெட், 670,000 பவுண்ட்ஸ் (இலங்கை பணமதிப்பில் ரூ.28.6 கோடி) விலையில் விற்கப்பட்டது.
அதே ஏலத்தில், டைட்டானிக் கப்பலின் லைஃப் படகு இருக்கை குஷன் 390,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது.
“இந்த விலை, டைட்டானிக் கதைக்கு உலகம் இன்னும் காட்டும் ஆர்வத்தையும், அந்த பயணிகளின் நினைவுகளுக்கான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது” என ஏலத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.
டைட்டானிக், 1912 ஏப்ரல் 15 அன்று பிரித்தானியாவிலிருந்து நியூயார்க் நோக்கி பயணிக்கும் போது பனிப்பாறையில் மோதி மூழ்கியது. 2,200 பயணிகளில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.
இந்த பேரழிவு, ஏழை முதல் பணக்காரர் வரை பல்வேறு சமூகத்தினரை பாதித்ததால் உலக வரலாற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
டைட்டானிக் தொடர்பான நினைவுப் பொருட்கள் ஏலத்தில் எப்போதும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
2024-இல், RMS கார்பேத்தியா கப்பல் கேப்டனுக்கு வழங்கப்பட்ட தங்கக் கடிகாரம் 1.56 மில்லியன் பவுண்ட்ஸ் விலையில் விற்கப்பட்டு, டைட்டானிக் நினைவுப் பொருட்களில் மிக உயர்ந்த விலை சாதனையாக இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |