ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆயுதம் வழங்க
ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தாக்குதல் மற்றும் தற்காப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைப் பயன்படுத்தி, 2,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன.

ஈரான் மீது Tomahawk குரூஸ் ஏவுகணைகள் மழையாக பொழிந்த நிலையில், பதிலடியாக ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஷாஹெத் ட்ரோன்கள் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் நுழையும் நிலையில், அமெரிக்காவால் இந்தப் பிராந்தியத்தில் தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதம் வழங்க முடியுமா மற்றும் ஈரானிய தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா என்பது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள போருக்கு போதுமான ஆயுதங்களை வழங்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் திணறுவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது.
அமெரிக்கா ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்கியுள்ளது, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து, ஆயத்துல்லா அலி காமெனி உட்பட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரைக் கொன்றது.
ஆனால் ஆபரேஷன் எபிக் ப்யூரி ஏற்கனவே அமெரிக்காவின் ஏவுகணை இருப்பை காலி செய்துவிட்டது என்றே தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கும் உக்ரைனுக்கும் பல முனைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான ஏவுகணைகள் அமெரிக்காவிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் Andrius Kubilius எச்சரித்துள்ளார்.
நான்கு மடங்காக
இதனிடையே, அமெரிக்காவால் ஒரு போரை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்ற உறுதிமொழிகளை ட்ரம்ப் அளித்த போதிலும், நிலைமையை அவர் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை Lockheed Martin, Northrop Grumman, RTX, Honeywell, and L3Harris Technologies ஆகிய பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விவாதித்துள்ளார்.

அவர்கள் ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்க ஒப்புக்கொண்டதாகவே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், போருக்கான ஆயுதங்களை வாங்க நாடாளுமன்றத்தில் கூடுதல் நிதியைக் கோருவதையும் ட்ரம்ப் பரிசீலிக்க இருக்கிறார். 50 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு கிடைத்தால் உற்பத்தி உடனடியாகத் தொடங்கலாம் என்றும் அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |