லாஸ் ஏஞ்சல்ஸ் தொடரும் வன்முறை போராட்டம்: இரவு ஊரடங்கு மற்றும் தேசிய காவல் படை குவிப்பு!
போராட்டங்களின் காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்ற சட்டம்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைதுசெய்து நாடு கடத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனவரி மாதம், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து கைது செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கலிபோர்னியாவில் வெடித்த போராட்டங்கள்
கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணிபுரிந்த 44 ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டிரம்பின் குடியேற்றச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் 7 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது.
ஊரடங்கு மற்றும் தேசிய காவல் படை குவிப்பு
போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் தேசிய காவல் படை (National Guard - NG) பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் போராட்டக்காரர்கள் கடைகளைக் கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |