ஈரான் போரில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப்... இன்னொரு பெருந்தவறை செய்ய திட்டமிடுவதாக தகவல்
ஹார்முஸ் நிரிணை விவகாரத்தில் நட்பு நாடுகள் அனைத்தும் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், ஈரானின் உயிர்நாடியை உலுக்க அவர் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆக்கிரமித்துக் கைப்பற்ற
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் போரில் களமிறங்கிய ட்ரம்ப் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளார். ஈரானால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க எந்த நட்பு நாடுகளும் முன்வரவில்லை.

அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பிரித்தானியாவும், தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானின் மணிமகுடமாகவே பார்க்கப்படும் கார்க் தீவை ஆக்கிரமித்துக் கைப்பற்றுவதன் சாத்தியம் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஈரான் மீதான போர் தவறான நடவடிக்கை என ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும், இராணுவ நிபுணர்களும் கூறி வரும் நிலையில், கார்க் தீவை ஆக்கிரமிப்பது என்பது பெருந்தவறாக மாறக் கூடும் என்றும், அதனால் இஸ்ரேல் மட்டுமின்றி, மொத்த மத்திய கிழக்கும் ஈரானால் கடுமையாக தண்டிக்கப்படும் ஆபத்து உருவாகும் என்றும் கூறுகின்றனர்.
கார்க் தீவை கைப்பற்றும் நகர்வை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றால், ஈரானில் அமெரிக்க இராணுவம் களமிறங்க வேண்டும். அப்படி ஒன்று நடந்தால், அது வளைகுடா நாடுகளில், குறிப்பாக சவுதி அரேபியாவில், அமைந்துள்ள எண்ணெய் ஏற்றுமதி நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர்கள் மீது, ஈரானின் உக்கிரமானப் பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது.
ஆனால் ஈரான் பற்றி நன்கறிந்துள்ள இஸ்ரேல், தங்கள் படைகளை ஈரானில் களமிறக்கும் முடிவில் இல்லை என்றே தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், ரியூவன் அசார் என்பவரும் இதை உறுதி செய்துள்ளார்.

மட்டுமின்றி, தங்கள் முடிவை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்றும் அசார் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி மாற்றம் என்பது ஈரான் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அசார் பதிவு செய்துள்ளார்.
தற்போது ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் வரையில் வளைகுடா எண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
கோரிக்கையை நிராகரிக்க
இதனால் ட்ரம்ப் விரும்பினாலும்கூட, அவரால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. கடந்த ஜூன் மாதம் போன்று, இரண்டு நாட்களில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரலாம் என இஸ்ரேலுடன் களமிறங்கிய ட்ரம்பால், இதுவரை வெளியேறும் முடிவை எடுக்க முடியவில்லை.
இதனையடுத்தே நேச நாடுகளின் உதவியைக் கோரினார். ஆனால் அவர்களும் தற்போது கோரிக்கையை நிராகரிக்க, ஈரான் போரில் ட்ரம்ப் மட்டும் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார்.

இதனிடையே, கார்க் தீவின் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் அலறவிட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலில் கொத்துகுண்டுகளால் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கார்க் தீவை ட்ரம்ப் தொடுவது மத்திய கிழக்கை அமெரிக்காவிடம் இருந்து அகற்றும் என்றே கூறுகின்றனர். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் கார்க் தீவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த தீவை அமெரிக்கா தாக்கி அழித்தாலும், கைப்பற்றினாலும், மத்திய கிழக்கு நாடுகள் ஈரானின் கடும் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |