இதுவரை செய்த கொடுமைகளுக்காக ஈரான் இன்னும் அனுபவித்ததில்லை... கொந்தளிக்கும் ட்ரம்ப்
ஈரான் தரப்பிடமிருந்து வந்துள்ள புதிய அமைதித் திட்டத்தை மறுஆய்வு செய்யப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அத்திட்டத்தின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஐயம் தெரிவித்துள்ளார்.
உரிய தண்டனை
அத்துடன், ஈரான் இதுவரை செய்துள்ள கொடுமைகளுக்கான உரிய தண்டனையை அனுபவித்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிக் காவலர் படைக்கு மிக நெருக்கமான செய்தி நிறுவனங்களான Tasnim மற்றும் Fars ஆகியவை வெளியிட்டுள்ள தகவலில்,
ஈரான், பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஒரு புதிய 14 அம்ச திட்டத்தை அனுப்பியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் அதை உறுதி செய்ததுடன், அது தொடர்பில் பின்னர் தகவல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அதை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 47 ஆண்டுகளாக மனிதகுலத்திற்கும், உலகத்திற்கும் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு, இன்னும் அவர்கள் போதுமான விலையைக் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஒத்துப்போகாத ஈரானின் இன்னொரு முன்மொழிவை ட்ரம்ப் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.

இராணுவ நடவடிக்கை
இந்த நிலையில், பந்து தற்போது அமெரிக்கா களத்தில் இருப்பதாகவும், ராஜதந்திரப் பாதையைத் தெரிவு செய்வதா அல்லது மோதல் போக்கைத் தொடர்வதா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என ஈரானின் துணை வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறினார்.
மட்டுமின்றி, ஈரான் அந்த இரண்டுக்கும் தயார் நிலையிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம் என்று அமெரிக்கா பலமுறை கூறியுள்ளது.

அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிப்ரவரியில் தாக்குதல்களைத் தொடங்கியபோது ட்ரம்ப் குறிப்பிட்ட முதன்மை நோக்கமும் இதுவே ஆகும்.
ஈரானின் சமீபத்திய 14 அம்ச முன்மொழிவில், ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், ஹார்முஸ் நீரிணையின் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்குதல், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல்,
இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், அத்துடன் நீரிணைக்கான ஒரு புதிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவையும் அடங்கியிருப்பதாக ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, சனிக்கிழமையன்று புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான புதிய இராணுவ நடவடிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |