அணுஆயுத சோதனை நடத்தும் பாகிஸ்தான் - டிரம்ப் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் மற்றும் சீனா அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அணுஆயுத சோதனை
கடந்த வாரம் தென்கொரியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அணு ஆயுத சோதனை நடத்துமாறு அமெரிக்கா போர் துறைக்கு உத்தரவிடுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டார்.
சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் அணு ஆயுதஎண்ணிக்யை சமன்படுத்தவே அணுஆயுத சோதனை நடத்துவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீனா அணு சோதனையில் ஈடுபட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் , "ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளும் ரகசியமாக அணு ஆயுதசோதனை நடத்தி வருகிறது.
ஆனால் அந்த நாடுகள் இது குறித்து பேசுவதில்லை. நாங்கள் திறந்த சமூகம், அதனால் இது குறித்து பேசுகிறோம். நிலத்தடியில் சோதனை செய்கிறார்கள். அங்குள்ள மக்களுக்கு சோதனையில் என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியாது.
நீங்கள் சிறிது அதிர்வை உணர்கிறீர்கள். இதில் பூகம்பம் போன்ற சிறிய அதிர்வுகள் இருந்தாலும், அதனை ரகசியமாக மேற்கொள்ள முடியும். மற்றவர்களால் கண்டறிய முடியாது. நம்மிடம் உலகத்தை 150 முறை தகர்க்க போதுமான அணு ஆயுதங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் எத்தனை உள்ளது?
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துவது இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் உள்ளது. 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொள்ளவில்லை.
இந்தியாவிடம் தற்போது 180 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் சீனாவிடம் 600 அணு ஆயுதங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |