இன்னும் மிக மோசமாக இருக்கும்... ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்ப் சபதம்
ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது, மீண்டும் மத்திய கிழக்கில் போர் தொடர்பிலான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தயாராக வேண்டும்
செவ்வாய்க்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடந்துள்ள நிலையில், புதன்கிழமையன்று ஈரான் தொடர்பில் ட்ரம்ப் சபதம் செய்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், நேற்று நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம்; இன்றும் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என்றார்.
அத்துடன் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஈரான் தயாராக வேண்டும் என்ற அழைப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனிடையே, ட்ரம்பின் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், எந்தவொரு அழுத்தம் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராகவும் ஈரான் உறுதியாக நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இதனையடுத்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாக IRGC தெரிவித்தது.
புதன்கிழமை ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில், தங்களுக்கு மிகவும் சாதகமாக இருந்திருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு அவர்கள் அதிக காலம் எடுத்துக்கொண்டார்கள், தற்போது அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

இராணுவ ரீதியாக ஈரான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்கா அதன் நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகளை தொடர்ச்சியாக மாற்றி வருவதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதாகவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், ட்ரம்ப் நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார்.
மேலும், ஈரான் நிலைமையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், எந்தவொரு தூதரக ரீதியான செயல்முறைக்கும் குறைந்தபட்ச நிலைத்தன்மை தேவை என்றும் பாகாய் குறிப்பிட்டுள்ளார்.

முற்றுகையை மீறியதாக
இதனிடையே, ஈரானிலிருந்து எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்று, நடைமுறையில் உள்ள முற்றுகையை மீறியதாகக் கூறப்படும் ஓமன் வளைகுடாவில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் புதன்கிழமையன்று தெரிவித்தது.
இந்த நிலையில், ஓமன் கடற்கரைக்கு அப்பால் 'செட்டபெல்லோ' (Settebello) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, மூன்று இந்திய மாலுமிகள் காணாமல் போனதாகவும், 21 கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் நடைமுறையில் மூடியதைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கி வருகிறது.

இதனைத்தொடர்ந்து முற்றுகையை மீறியதாகக் கூறி அமெரிக்கா தாக்குதல் நடத்தும் எட்டாவது கப்பலாகும் செட்டபெல்லோ. செவ்வாயன்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் ரேடார் தளங்களை இலக்காகக் கொண்டிருந்தன என சென்ட்காம் தெரிவித்தது.
ஆனால், அமெரிக்கத் தாக்குதல்கள் அப்பகுதியில் இருந்த இரண்டு நீர்த்தேக்கங்களை சேதப்படுத்தியதாகவும், இதனால் தெற்குத் துறைமுக நகரமான சிரிக்கில் (Sirik) வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் 12 மணி நேரமாகப் குடிநீர் வசதியின்றித் தவிப்பதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |