91 சதவிதம் பலனளிக்கும் சீன தடுப்பூசி; முதற்கட்டமாக 3 மில்லியனை ஆர்டர் செய்த துருக்கி
83 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட மத்திய கிழக்கு நாடான துருக்கியில், அதிகாரப்பூர்வமாக இதுவரை 19,115 கோவிட்-19 இறப்புகள் மற்றும் 2.2 மில்லியன் வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், சீனாவின் சிநோவாக் தடுப்பூசியை இன்னும் சில நாட்களில் இறக்குமதி செய்யவுள்ளதாக துருக்கி நாட்டு சுகாதார அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா அறிவித்துள்ளார்.
துருக்கியில் 7,371 தன்னார்வலர்களின் மீது இந்த சிநோவாக் தடுப்பூசியை பரிசோத்திதத்தபோது, 91.25 சதவீதம் பலனளிக்கக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 3ஆம் கட்ட சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி முதற்கட்டமாக 3 மில்லியன் சிநோவாக் டோஸ்களை வரும் ஞாயிற்றுக்கிழமை பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை அடுத்த மாதம் பெறுகிறது.
மேலும், அடுத்த சில நாட்களில் ஃபைசர் / பயோஎன்டெக் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் டோஸுக்கு ஒரு ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திடவுள்ளது. மேலும் இந்த ஃபைசர் / பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசிகளை கூடுதலாக வாங்குவதற்கான விருப்பத்துடன் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இறக்குமதியாகும் டோஸ்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிடமிருந்து தொடங்குகிறது.
மருந்துகள் கிடைத்ததும், துருக்கி ஒரே நாளில் 1.5 முதல் 2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.