எப்ஸ்டீன் சர்ச்சை: பலிகடா சிக்கியது... பிரித்தானிய பிரதமர் தலை தப்புமா?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்த ஒருவரை பிரித்தானியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் புயலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய அரசில் முக்கிய பொறுப்பு வகித்துவந்த ஒருவர் அந்த விடயத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எப்ஸ்டீன் சர்ச்சை
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர் பீற்றர் மாண்டல்சன். நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து, பல்வேறு பதவிகளை வகித்த பீற்றரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமித்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.
அந்த ஆவணங்களில் யாரெல்லாம் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
அவ்வகையில், அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான பீற்றர், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதுடன், பிரித்தானிய அரசின் முக்கியமான பல ஆவணங்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டதற்கு ஆதாரமான சில மின்னஞ்சல்களும் கிடைத்ததைத் தொடர்ந்து பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு உருவானது.
பிரதமருக்கு சிக்கல்
எப்ஸ்டீன் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து பீற்றர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பீற்றருக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், தான் அவரை பணிநீக்கம் செய்ததாக ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
ஆனால், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது குறித்து ஏற்கனவே ஸ்டார்மருக்குத் தெரியும் என்றும், அது தெரிந்திருந்தும் அவர் பீற்றரை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்தார் என்பது பின்னர் தெரியவந்தது.

ஆனாலும், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்குமான உறவு எவ்வளவு ஆழமானது என்பது தனக்குத் தெரியாது என்றும், அவர் பல ஆண்டுகளாகவே பொய்களை சொல்லிவந்துள்ளார் என்றும், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களிலிருந்துதான் முழுமையான உண்மை தெரியவந்துள்ளது என்றும் கூறினார் ஸ்டார்மர்.
பீற்றரைக் குறித்து இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் எனக்கு அப்போதே தெரிந்திருந்தால், நான் அவரை அரசின் கிட்டேயே வர அனுமதித்திருக்கமாட்டேன் என்றும், புதிய தகவல் கிடைத்ததும், உடனே நான் பீற்றரை பணிநீக்கம் செய்துவிட்டேன் என்றும் ஸ்டார்மர் கூறினார்.
ஆனாலும், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த விடயம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பீற்றர் விடயத்தை ஸ்ட்ராமர் மூடி மறைத்துவிட்டார் என்கிறார்கள். ஆக, பீற்றர் விவகாரத்தால் ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற நிலை உருவானது.
பலிகடா சிக்கியது...
இந்நிலையில், பீற்றரால் உருவான சர்ச்சைக்கு பொறுப்பேற்று, பிரித்தானிய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது பெயர் மார்கன் மெக்ஸ்வீனி. மார்கன், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய அரசியலில் முக்கிய பங்காற்றிவருகிறார்.

ஜெரமி கார்பின் என்பவர் தலைமையில் லேபர் கட்சி வீழ்ச்சியை சந்தித்தபோது, கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் கெய்ர் ஸ்டார்மர்தான் என பரிந்துரைத்தவர் இந்த மார்கன்தான்.
அவர் கணித்ததுபோலவே, ஸ்டார்மர் தலைமையில் லேபர் கட்சி பெரும் வெற்றி பெற, தான் பிரித்தானிய பிரதமரானதும், பிரதமர் இல்லத்தின் chief of staff என்னும் முக்கிய பொறுப்பை மார்கனுக்கு வழங்கினார் ஸ்டார்மர்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமிக்கப்பட்ட பீற்றர் பெயர் இருப்பது தெரியவந்ததால் பிரதமர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானதும், தனது chief of staff பதவியை ராஜினாமா செய்துள்ளார் மார்கன்.
ஆக, பிரதமரைக் காப்பாற்ற மார்கன் பலிகடா ஆகியுள்ளாரோ என்ற கருத்து உருவாகியுள்ளது. பீற்றரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமிக்குமாறு பிரதமர் ஸ்டார்மரிடம் பரிந்துரைத்தது தான்தான் என்று கூறி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மார்கன்.
பிரதமர் தலை தப்புமா?
விடயம் என்னவென்றால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார் மார்கன். ஆனால், அவர் ஊடகங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை.
அவரது புகைப்படத்தையே பலரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆக, பிரதமர் ஸ்டார்மரின் வெற்றியின் பின்னால் முக்கிய நபராக நின்றும், மக்களில் பெரும்பாலானோருக்கு மார்கன் யாரென்றே தெரியாது.
ஆகவே, இப்படி யாரென்றே தெரியாத ஒரு நபரின் ராஜினாமாவால் பிரதமர் ஸ்டார்மரின் தலை தப்புமா என்றொரு கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |