ஹொட்டல்களிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற உத்தரவு : பிரித்தானிய அரசுக்கு பின்னடைவு
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைக்கும் விடயம் தொடர்பில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒன்று பிரித்தானிய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஹொட்டல்களில் தங்கவைக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்
பிரித்தானியாவில், புகலிடக்கோரிக்கையாளர்கள் மக்கள் வாழும் இடங்களில் அமைந்துள்ள ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரித்தானிய சிறுமி ஒருத்தியிடம் அத்துமீற, ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள்.
அதைத் தொடர்ந்து புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
இந்நிலையில், Eppingஇலுள்ள The Bell Hotel என்னும் ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டதை எதிர்த்து எசெக்ஸ் கவுன்சிலின் கீழ் செயல்படும் Epping Forest District Council என்னும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பணம் கொடுத்து ஹொட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு, புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைப்பது விதிமீறலாக கருதப்படலாம் என தீர்ப்பளித்தார்.
ஆக, வழக்கில் கவுன்சில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, The Bell ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன் ஹொட்டலிலிருந்து வெளியேறியாகவேண்டும்.
விடயம் என்னவென்றால், எசெக்ஸ் கவுன்சிலைத் தொடர்ந்து, மேலும் பல கவுன்சில்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதால், பிரித்தானிய அரசுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |