பிரித்தானியாவில் 115 பேர் பலி! எச்சரித்த 24 மணி நேரத்திலே உயரும் எண்ணிக்கை: வெளியான புள்ளி விவரம்
பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 52,009 பேர் புதிததாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவே கடந்த புதன் கிழமை 179 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் 24 மணி நேரத்திற்குள் 50 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு, கடந்த 18-ஆம் திகதி 54,571 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு ஒரு லட்சத்தை தொடும் என்று சுகாதார செயலாளர் Sajid Javid எச்சரித்து 24 மணி நேரம் கூட இன்னும் முழுமை ஆகாத நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும், குளிர்காலம் நெருங்குவதால், NHS ஊழியர்கள் கடுமையான அழுத்தத்தை எதிர் கொண்டு வருவதாக கூறிய அவர், தற்போதைக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படாது என்று கூறினார்.
இருப்பினும் மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளுங்கள், நிலைமை சரியில்லாமல் இருந்தால், கிறிஸ்துமஸுக்கு முன்பு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
பிரித்தானியாவில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.
கடந்த ஏழு நாட்களில் 320,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கான நேர்மறை சோதனை பெற்றனர்.
இது முந்தைய வாரத்தை விட 17 சதவீதம் அதிகம் ஆகும். அதே போன்று இறப்பு விகித்ததையும் பார்த்தால், தற்போது 954-ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் ஓப்பிடும் போது 21 சதவீதம் அதிகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களில் 23,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத பாதிப்பை தற்போது பிரித்தானியா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.