கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா
விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே
குறித்த அசாதாரண பாதுகாப்பு திட்டத்திற்கு Operation Sky Shield என பெயரிட்டுள்ளனர். ஐரோப்பிய விமானப்படை மற்றும் பிரித்தானியாவின் RAF இணைந்து IAPZ என்ற Integrated Air Protection Zone ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த சிறந்த விமானிகள் தலைமை தாங்குவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் நேட்டோவுக்கும் தொடர்பில்லை என்றே விளக்கமளித்துள்ளனர்.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இதன் நோக்கமாக இருக்கும், இதில் cruise ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதே முதன்மையான இலக்கு என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மண்டலம் என்பது செயல்பாட்டில் உள்ள உக்ரைனின் மூன்று அணு மின் நிலையங்கள் மற்றும் ஒடேசா மற்றும் லிவிவ் நகரங்கள் உட்பட நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கும்.
ஆனால், ரஷ்யாவுடன் நேரடி மேற்கத்திய நாடுகளின் மோதலுக்கான அச்சம் காரணமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியை ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவின் இந்த புதிய திட்டம் உள்ளடக்கவில்லை.
இதனிடையே, பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் இராணுவ நிபுணர்கள் பலர், இந்தத் திட்டமானது உக்ரைனில் 10,000 ஐரோப்பிய தரைப்படை வீரர்கள் களமிறங்குவதை விட அதிக இராணுவ, அரசியல் மற்றும் சமூக பொருளாதார தாக்கத்தை அடையக்கூடும் என பரிந்துரைத்துள்ளனர்.
உண்மையில் இந்த திட்டமானது 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களில் உக்ரைனுடன் இணைந்து முன்னாள் RAF விமானிகள் மற்றும் இராணுவ நிபுணர்கள் குழு ஒன்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அனுமதியை அளிக்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.
வல்லரசு நாடு ஒன்றை
தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் ட்ரம்ப் நிர்வாகம் படிப்படியாக ரத்து செய்து வரும் நிலையில் Operation Sky Shield திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தி, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
தமது திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஜெலென்ஸ்கி மீதான கோபம் காரணமாக, அமெரிக்கா அளிக்கவிருந்த பல பில்லியன் டொலர் ஆயுத உதவிகளை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக உக்ரைனின் இராணுவம் தற்போது மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்கிறது.
அமெரிக்காவின் எந்த உதவியும் இல்லாமல், உலகின் வல்லரசு நாடு ஒன்றை எதிர்த்து போரிடுகிறது. இன்னொரு பேரிடியாக இராணுவ உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் ட்ரம்ப் நிர்வாகம் நிறுத்தியது.
இதனால், ரஷ்ய தாக்குதலை முறியடிக்கவும், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தவும் இனி உக்ரைனால் முடியாமல் போகலாம். அத்துடன், அமெரிக்கா பகிர்ந்துவரும் உளவு ரகசியங்களை பிரித்தானியாவும் இனி உக்ரைனுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.
அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், அமெரிக்காவின் HIMARS மற்றும் பிரித்தானியாவின் Storm Shadows ஏவுகணைகளை இனி உக்ரைன் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Operation Sky Shield செயல்பாட்டிற்கு வரும் என்றால், அது உக்ரைன் போரில் முக்கிய திருப்பமாக அமையும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |