உக்ரைனின் ஆபரேஷன் spiderweb தாக்குதலுக்கு பிரித்தானியா உதவியதா: அமைச்சர் பதில்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் முன்னெடுத்த மிக மோசமான ஆபரேஷன் spiderweb தாக்குதலில் பிரித்தானியாவின் பங்கிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பிரித்தானியா செயல்பட்டிருக்க
கடந்த வார இறுதியில் ரஷ்யாவிற்குள் உள்ள தளங்களைத் தாக்க ஆபரேஷன் spiderweb நடவடிக்கையை உக்ரைன் முன்னெடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தி அதிரடியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் நாற்பதிற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை மூன்றாம் உலகப் போராக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்தார். அத்துடன், தாக்குதலின் தன்மையை குறிப்பிட்டு, இதன் பின்னால் பிரித்தானியா செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது வசப்பட்டிருக்கும் நாடுகளால் மட்டுமே இப்படியான ஒரு தாக்குதலை முன்னெடுக்க முடியும் என்றும், லண்டன் அல்லது வாஷிங்டன் அரசு மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாக மறுத்திருப்பதால், அமெரிக்காவின் பங்கு இல்லை என்றும், ஆனால் லண்டன் தரப்பு இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், லண்டன் எவ்வளவு ஈடுபட்டுள்ளது, பிரித்தானியப் படைகள் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வளவு ஆழமாக ஈடுபட்டுள்ளன என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வரலாற்றில் இடம்பெறும்
இந்த நிலையில், ஆபரேஷன் spiderweb தாக்குதலில் பிரித்தானியாவின் பங்கிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவ் ரீட் பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைகள் என்னவென்று எனக்குத் தெரியாதபோது நான் எதையாவது ஊகிக்கப் போவதில்லை. ரஷ்யாவின் மிருகத்தனமான, சட்டவிரோத தாக்குதல் மற்றும் படையெடுப்பிற்கு எதிராக, உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசாங்கம் உடனிருக்கும் என்றார்.
ஆபரேஷன் spiderweb தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், இது சந்தேகத்திற்கிடமின்றி வரலாற்றில் இடம்பெறும் என்றார். இதற்கிடையில், உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து ரஷ்யா இரவோடு இரவாகத் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்தத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |