ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் புதிய கூட்டணி
பிரித்தானியா மற்றும் போலந்து இடையே இன்று (மே 27) புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் லண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் எதிர்மறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
பிரித்தானிய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த உடன்படிக்கை எல்லை பாதுகாப்பை மேம்படுத்துதல், குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவை 'முக்கியமான நீண்டகால அச்சுறுத்தல்' எனக் கருதும் இரு நாடுகளும், சைபர் தாக்குதல்கள், உளவு நடவடிக்கைகள் மற்றும் ஹைபிரிட் தாக்குதல்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
போலந்து, உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் முக்கிய மையமாக இருப்பதால், ரஷ்யாவின் உளவு மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகிறது.
ஐரோப்பா எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இன்னும் வலுவான கூட்டாண்மை தேவைப்படுவதாகவும், இந்த உடன்படிக்கை, ஒரு தலைமுறைக்குப் பிறகு பிரித்தானியா-போலந்து உறவுகளில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளும் அடுத்த தலைமுறை ஆயுதங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவுள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் பிரித்தானியா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், பிரெக்சிட்டால் ஏற்பட்ட பிளவை சரிசெய்து, ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKPolandTreaty #DefencePact #EuropeSecurity #RussiaThreat #CyberDefense #NATO #Geopolitics