பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது
பாலஸ்தீன நடவடிக்கை என்ற குழுவை தடை செய்வதற்கான பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 365க்கும் மேற்பட்டவர்களை லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது.
இனப்படுகொலையை எதிர்க்கிறேன்
கறுப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்து பாலஸ்தீன கொடிகளை அசைத்து, காஸா ஆதரவு முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பாலஸ்தீன நடவடிக்கை குழுவிற்கு ஆதரவளிக்கிறேன் போன்ற வாசகங்களுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
காஸாவில் இனப்படுகொலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. நாடாளுமன்ற சதுக்கத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் வெளியேற்ற முயற்சி செய்தனர். இந்த நிலையில், வெட்கக்கேடு என பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரித்ததற்காக 365 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்காக ஐந்து பேர் உட்பட பிற குற்றங்களுக்காக ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
14 ஆண்டுகள் வரையில் சிறை
கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கை குழுவில் சிலர் இஸ்ரேலுக்கு பிரித்தானியாவின் ஆதரவை எதிர்த்து ராயல் விமானப்படை தளத்திற்குள் நுழைந்து விமானங்களை சேதப்படுத்தியதை அடுத்து, பிரித்தானிய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையை தடை செய்தது.
இதனால், அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதும் குற்றச்செயலாக பார்க்கப்பட்டது, அப்படியானவர்கள் கைது செய்யப்பட்டால் 14 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம்.
இதனிடையே, அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் கடந்த வாரம் தடைக்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |