தாக்குதல்களை நிறுத்த உக்ரைனிடம் கோரிக்கை... ரஷ்யா பறந்த அமெரிக்க உளவுத்துறை தலைவர்
CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னறிவிப்பின்றி மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது பயணத்திற்கு முன்பு, மாஸ்கோ மற்றும் வடக்கு ரஷ்யாவின் பிற நகரங்கள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோரிக்கை திங்கள் முதல் புதன் வரை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவிருப்பதாக கீவ்விற்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
ரஷ்யாவையும் உக்ரைனையும் ஒரு ஒப்பந்தத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான தருணத்தில் இந்த இரகசியப் பயணம் அமைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்காவின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானம் மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸிலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது. மட்டுமின்றி, தங்கள் பகுதியில் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவ்விமானம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வான்வெளியில் இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது என்று அவர் கூறினார்.
ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட Operation Economic Outcast என்ற புதிய நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்த மறுநாளே, ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணமும் அமைந்துள்ளது.
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இந்த நடவடிக்கை குறிவைக்கிறது; ஈரானின் முக்கிய உத்திசார் வர்த்தகக் கூட்டாளிகளில் ரஷ்யாவும் ஒன்று.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |