130 கோடி மக்களின் ஓராண்டு நீர் தேவை - AI தரவு மையங்களால் ஏற்பட உள்ள பாரிய பாதிப்பு
AI தரவு மையங்களால் ஏற்பட உள்ள பாரிய பாதிப்பு ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
AI தரவு மையங்கள்
AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை தரவு மையங்களை உருவாக்குவதில் முதலீடு செய்து வருகிறது.

இந்தியாவிலும், விசாகப்பட்டினத்தில் தரவு மையங்களை அமைக்க கூகுள், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பில்லியன்களை ஒதுக்கியுள்ளன.
நீர் மற்றும் மின்சார நுகர்வு
செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களின் பெரும் நீர் மற்றும் மின்சார நுகர்வு குறித்து கவலைகள் எழுந்துள்ளது.
2030 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான நீர் நுகர்வு ஆண்டுக்கு 130 கோடி மக்களின் தேவைகளுக்குச் சமமாகலாம் என்று ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
AI தரவு மையங்கள், குறிப்பாக வெப்பமான பகுதிகளில், மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் குளிரூட்டும் அமைப்புகளைச் சார்ந்துள்ளன.

2030 ஆம் ஆண்டில் இதற்கான நீர் பயன்பாடு 9.3 லட்சம் கோடி லிட்டர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிக்கும் 130 கோடி மக்களின் ஓராண்டுக்கான குறைந்தபட்ச வருடாந்திர வீட்டு நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது ஆகும்.
இதே போல், 2030 ஆம் ஆண்டுக்குள் AI தரவு மையங்கள் 945 டெராவாட்-மணி (TWh) மின்சாரத்தை நுகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ஆண்டு மின்சாரப் பயன்பாட்டை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.
2025 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய தரவு மையங்கள் சுமார் 448 TWh மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிக்கும் 130 கோடி மக்களின் 2.5 ஆண்டுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும்.
அது மட்டுமின்றி AI தரவு மையங்கள் சுற்றியுள்ள நிலப்பரப்பைச் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக்கி, 'வெப்பத் தீவுகளையும்' உருவாக்குகின்றன என்றும், இதனால் 34 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கை வெப்பமயமாகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிரமான சந்தர்ப்பங்களில் இந்த அதிகரிப்பு 9 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டது. இந்த வெப்பநிலை உயர்வு, 9.9 கி.மீ (6.2 மைல்கள்) தொலைவு வரையிலான பகுதிகளைப் பாதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |