ஈரானுக்கு எதிரானப் போரில் ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை செலவிட்ட தொகை... விரிவானத் தகவல்
அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், ஈரானுக்கு எதிரானப் போரில் ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பென்டகனுக்கு எட்டாக்கனி
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டி வந்த சூழலிலும், பெரும்பாலான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி வந்த நிலையிலும்,

பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்த வேளையிலும், பெருநிறுவனங்கள் பெருகிவரும் இழப்புகளைப் பதிவு செய்து கொண்டிருந்த சமயத்திலும், எவ்வித அச்சுறுத்தலும் எழாத நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் போரைத் தொடங்கத் தீர்மானித்தார்.
ஆனால், ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தபோதிலும், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை நிறுத்திவைக்கவும், அதனை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்புக்கு உட்படுத்தவும் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையிலும்,
அமெரிக்கா பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டு அதிரடியாக ஈரான் மீது குண்டுவீசத் தொடங்கியது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு உலகளாவிய அரசியல் வல்லுநர்களுக்கும், பாதுகாப்புத் துறையின் தீவிர ஆதரவாளர்களுக்கும் கூட மிகுந்த ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
போருக்காக அமெரிக்கா பல்லாயிரம் கோடி டொலர்களைச் செலவிட்டிருந்தபோதிலும், வெற்றி இன்றும் பென்டகனுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது அப்போரிலிருந்து கண்ணியமான முறையில் வெளியேற முயன்று வருகிறார்.
தற்போதைய அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல், 2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது இஸ்ரேல் குண்டு வீசியபோது தொடங்கியது; அதனைத் தொடர்ந்து விரைவில் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அதன் பல உயர்மட்ட தலைவர்கள், மூத்த இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
உடனடியாக ஈரானும், வளைகுடாப் பகுதியில் நடத்திய தாக்குதல்கள் உட்பட, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்திப் பதிலடி கொடுத்தது.

தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை மூடியதுடன், சர்வதேச கச்சா எண்ணெய் விலையைத் தீப்பிடித்து எரியச் செய்தது. இதனால் கடும் நெருக்கடியை எதிர்கொண்ட ட்ரம்ப் ஏப்ரல் 7, 2026 அன்று, நிபந்தனைக்குட்பட்ட இரு வாரப் போர்நிறுத்தத்தை அறிவித்தார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் இதுவரை இணங்காத நிலையில், போர்நிறுத்தத்தை மீண்டும் நீட்டித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் ட்ரம்ப் நிர்வாகம் எவ்வளவு பணம் செலவழித்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தணிக்கை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை வாங்குவதற்காக மட்டுமே பில்லியன் கணக்கான டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
70 பில்லியன் டொலர்
ஊடகச் செய்திகளின் அடிப்படையில், ஏப்ரல் 22, 2026 நிலவரப்படி, சுமார் 70 பில்லியன் டொலர் அளவுக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
இது இராணுவ நடவடிக்கைகளின் நேரடிச் செலவுகள்; ஏவுகணைகள், ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் போன்ற விநியோக அமைப்புகளின் மதிப்பு; கப்பல்கள், விமானங்கள் மற்றும் படைகளை நிலைநிறுத்துவதற்கான செலவுகள்; ஆகியவற்றுடன், உபகரண இழப்புகள் மற்றும் சேதங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதில், அவசரகால மறுநிரப்பு ஒப்பந்தங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் எரிசக்தி கட்டணங்கள், விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் வர்த்தக இழப்புகள் ஆகியவையும் அடங்கும்.
போர் தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக பென்டகன் மதிப்பிட்டுள்ளது. ஆனால், செயல்பாட்டுச் செலவுகளில் மட்டும் 25 பில்லியன் முதல் 45 பில்லியன் டொலர் வரையிலான இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஊடக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன.
போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்காக, சுமார் 20 பில்லியன் முதல் 30 பில்லியன் டொலர்கள் வரை செலவிடப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.
பிராந்திய தளத் தாக்குதல்கள், விமான இழப்புகள், சேதமடைந்த அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் பழுதுபார்ப்புகள் ஆகியவற்றின் வடிவத்தில் 3 பில்லியன் முதல் 10 பில்லியன் டொலர் வரையிலான உபகரணச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை மீதான முற்றுகை மற்றும் பணவீக்கச் செலவுகள் காரணமாக, எரிசக்தி விலைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் சுமார் 5 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை இழப்பைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நீடிக்கும் என்றால், அமெரிக்காவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1.2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலப் போருக்கு அமெரிக்கா 36 பில்லியன் டொலர் என்ற மிகப்பெரிய தொகையைச் செலவழிக்க நேரிடலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |