சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் காலத்தை நீட்டிக்க அமெரிக்கா முயற்சி
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) 2030-இல் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) ஓய்வு பெறச் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆனால், தற்போது அமெரிக்க அரசாங்கம் அதன் ஆயுள் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க முயற்சி செய்து வருகிறது.
வர்த்தகம், அறிவியல் மற்றும் போக்குவரத்துக்கான அமெரிக்க செனட் குழு, மார்ச் 4 அன்று NASA-வின் அனுமதி மசோதாவில் திருத்தம் செய்யும் சட்டத்தை பரிசீலிக்க உள்ளது.
இதன் மூலம் ISS-இன் ஓய்வு பெறும் திகதி 2030-இல் இருந்து 2032-ஆக மாற்றப்படும். இந்த முன்மொழிவுக்கு இரு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்த கால நீட்டிப்பு, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான கூடுதல் நேரத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
Blue Origin, Voyager Space போன்ற நிறுவனங்கள் தனியார் விண்வெளி நிலைய திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், 2030-க்குள் புதிய நிலையம் செயல்படத் தொடங்குவதற்கான பணிகளில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை என்பதால் கவலைகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், சீனா தனது 'Tiangong' விண்வெளி நிலையத்தை விரிவுபடுத்தி, 2030-க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.
எனவே, ISS-இன் ஆயுள் நீட்டிப்பு அமெரிக்காவின் விண்வெளி முன்னணியை நிலைநிறுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |