குற்றங்களைத் தீர்க்க உதவும் கமெராக்களை மோசமான விடயங்களுக்காக பயன்படுத்தும் அமெரிக்க பொலிசார்
அமெரிக்க பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகளை கண்காணிக்க பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா முழுவதும், பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை பயன்படுத்தி, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள் முதலானோரை பின் தொடர்ந்ததும், துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.
கவனம் ஈர்த்த சம்பவம்
ஜார்ஜியாவைச் சேர்ந்த மார்ஸ்லி பேக்லீ என்னும் பெண், பொலிசாரான தன் முன்னாள் காதலர் மைக்கேல் ஸ்டெஃப்மேன் தன்னை கண்காணிப்பதை தெரிந்துகொண்டுள்ளார்.

மார்ஸ்லி எந்த கடைக்கு செல்கிறார், எந்த மருத்துவரை சந்திக்கிறார், யார் யாரை சந்திக்கிறார் என அனைத்து விடயங்களும் மைக்கேலுக்கு தெரிந்துள்ளது.
தன் வீட்டில் மைக்கேல் கமெரா எதையாவது மறைத்துவைத்துள்ளாரா, அல்லது ஜிபிஎஸ் மூலம் தன்னை கண்காணிக்கிறாரா என தேடிய மார்ஸ்லி, ஒரு கட்டத்தில் மைக்கேல் தன்னைப் பின்தொடர்வதாக முடிவே செய்துள்ளார்.
பின்னர், தான் குற்றவாளிகளை கண்காணிக்க பயன்படும், Flock Safety camera என்னும் கமெராவைப் பயன்படுத்தித்தான் மார்ஸ்லியின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாக மைக்கேல் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மைக்கேல் 13 மாதங்களாக சுமார் 600 முறை மார்ஸ்லியையும் அவரது மகளையும் கண்காணித்தது தெரியவந்தது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பெண்களை பின்தொடர்தல், துன்புறுத்துதல் மற்றும் கண்காணிப்பு கமெராக்களை தவறாக பயன்படுத்தியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, 2026ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மைக்கேல் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
குறைந்தது 50 சம்பவங்கள்
விடயம் என்னவென்றால், இப்படி பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக நாடு முழுவதும் குறைந்தது 50 பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது அல்லது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் 26 வழக்குகளில் பொலிசார் தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள், தாங்கள் சந்திக்க விரும்பும் பெண்கள் என பலரை பின்தொடர்ந்ததும் துன்புறுத்தியதும் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயம் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட கமெராக்களை தயாரிக்கும் நிறுவனம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்கு முன்பே, இந்த நடவடிக்கைகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
பயந்துபோய், வழக்கமான அன்றாட வேலைகளை மாற்றிக்கொண்டது, உறவினர்களின் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவது, தங்களைக் கண்காணிப்பது முடிந்தும், அது தெரியாமல் பயந்துகொண்டே இருந்தது என தாங்கள் அனுபவித்த துன்பங்கள், மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிசாரே, தங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டதாக அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |