அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள்
ஈரானில் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் குறித்து, அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளது.
பெரிய அளவிலான போர்
சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ள இந்த சந்திப்பில், அமெரிக்கா சமீபத்தில் இஸ்ரேலுக்கு 6,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களையும் தளவாடங்களையும் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிடுகிறார் என்ற யூகங்களுக்கு இது வலு சேர்த்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியானத் தகவலை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய அமைச்சகத்தின் பாதுகாப்பு கொள்முதல் இயக்குநரகம், தனது சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பிரிவு, அமெரிக்காவிற்கான அதன் தூதரகம் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) திட்டமிடல் இயக்குநரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த அமெரிக்க நடவடிக்கையை வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் சுமார் 115,600 டன் இராணுவப் பொருட்களைப் பெற்றுள்ளது. இது 403 முறை விமானங்களிலும் 10 முறை கப்பல் ஊடாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த தொடர் தாக்குதல்
ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்காக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் ஒரு புதிய திட்டத்தைத் தயாரித்துள்ளது.
ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டும் நம்பிக்கையில், அந்த நாடு மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தொடர் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் பரிசீலித்து வருகிறது; இதில் உள்கட்டமைப்பு இலக்குகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, கப்பல் போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்கும் ஆலோசனையும் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய நடவடிக்கையில் தரைப்படைகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளனர்.
மூன்றாவது வாய்ப்பாக, ஈரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக சிறப்புப் படைகளை ஈடுபடுத்துவதாகும். ஆனால், ஈரான் மீதான புதிய நடவடிக்கை தொடர்பில் இதுவரை ட்ரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |