பிரித்தானியாவில் உள்ள தங்களின் டன் கணக்கான தங்கத்தைத் திருப்பிக் கேட்கும் நாடு
Venezuela demands tonnes of gold from Bank of England: இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 31 டன் தங்கத்தைத் திருப்பித் தருமாறு வெனிசுலா கோரிக்கை விடுத்துள்ளது.
பேரழிவுகரமான நிலநடுக்கங்களில் இருந்து மீள்வதற்காக, இங்கிலாந்து வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெனிசுலா கோருகிறது.
நீண்ட காலமாக மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தலின் சட்டப்பூர்வத் தன்மையை பிரித்தானியா அங்கீகரிக்காததால், தங்களது நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் பூட்டி வைத்துள்ள 31 மெட்ரிக் டன் வெனிசுலா தங்கத்தை விடுவிக்க நீண்ட காலமாக மறுத்து வருகிறது.

ஜனவரியில் அமெரிக்காவால் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக வங்கியும் பிரித்தானிய அரசாங்கமும் அந்தத் தங்கக் கட்டிகளைத் தக்கவைக்கப் போராடி வருகின்றன.
பல திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டதன் பிறகும், இந்த வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, வெனிசுலா தனது மீட்புப் பணிகளுக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்த முனைந்து வருகிறது.
மேலும், வீடுகளைப் புனரமைத்தல், சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல், மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
மட்டுமின்றி, இந்த நோக்கத்திற்காக, இங்கிலாந்தில் உள்ள வெனிசுலாவின் தங்கத்தை மீட்பதை ஊக்குவிப்பதில் முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து வங்கியிடம் இருந்து தங்கத்தை விடுவிக்குமாறு மன்னர் சார்லஸிடம் அவர் மன்றாடிய ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது. இந்த இரட்டை நிலநடுக்கத்தின் பயங்கரமான, துயரமான விளைவுகளைச் சரிசெய்ய அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் அரசு தொலைக்காட்சியில் கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் சமூக நலனுக்காக அந்தச் சொத்துக்களை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு, அவற்றை மீட்க வேண்டியதன் அவசரத் தேவையை அவர் அப்போது வெளிப்படுத்தினார்.
பணவீக்கம் 575.9 சதவீதம்
கடுமையான அரசாங்க நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகள் ஆகியவற்றின் விளைவாக, வெனிசுலா ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது.
முந்தைய மாதத்தில் 13.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 19.9 சதவீதமாக உயர்ந்ததற்கு நிலநடுக்கங்களும் ஒரு காரணம் என்று அதன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெனிசுல மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, ஜூலை மாத முடிவுகளுடன், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாக உள்ளது.
ஜூன் 24 ஆம் திகதி மாலையில் ஏற்பட்ட அடுத்தடுத்த நில நடுக்கங்களில் சிக்கி 6,000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், 16,740 பேர் காயமடைந்தனர், மேலும் 17,907 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
நிலநடுக்கங்களால் 68 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 680,000 குழந்தைகள் உட்பட 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |