கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை நீக்கும் ஈரான் - என்ன காரணம்?
தனது நாணயமான ரியாலில் இருந்து 4 பூஜ்ஜியங்களை நீக்க ஈரான் முன்வந்துள்ளது.
4 பூஜ்யங்களை நீக்கும் ஈரான்
ஈரான் அரசு, தனது நாணயமான ரியாலில் இருந்து 4 பூஜ்யங்களை நீக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
2019 ஆம் ஆண்டிலே இந்த திட்டம் முன்மொழியப்பட்டாலும், அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் கார்டியன் கவுன்சிலின் ஒப்புதல் மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சட்டமாக கையெழுத்திட்ட பின்னர் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்த திட்டத்தின் படி, 10,000 ரியால்கள் 1 ரியாலாக மாற்றப்படும். ஆனால் இதன் காரணமாக ரியாலின் மதிப்பில் மாற்றம் இருக்காது.
என்ன காரணம்?
பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், விலை நிர்ணய குழப்பத்தை நீக்குதல் போன்ற நோக்கில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இந்த மாற்றத்தை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு வகையான நாணயங்களும் 3 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
ஐநாவின் தடைகள், சர்வதேச நாடுகளின் தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஈரானின் பணவீக்கம் 35% ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஈரானின் நாணயத்தின் மதிப்பு, ஒரு அமெரிக்க டொலருக்கு, 1,150,000 ரியால்களாகக் குறைந்துள்ளது.
இதே போல் அதிகளவிலான பணவீக்கத்தை எதிர்கொண்ட நாடுகள் தங்கள் நாணயத்தில் இருந்து, பூஜ்ஜியங்களை நீக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஜிம்பாப்வே 2000 ஆம் ஆண்டில் அதன் நாணயத்தில் இருந்து பூஜ்ஜியங்களை நீக்கியது. வெனிசுலா, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டிலும் அதன் நாணயத்திலிருந்து 5 பூஜ்ஜியங்களை நீக்கியது. ஆனால் இந்த நாடுகளில் பணவீக்கம் ஒரு சவாலாகவே உள்ளது.
துருக்கி, 2005 ஆம் ஆண்டில் அதன் நாணயத்திலிருந்து 6 பூஜ்ஜியங்களை நீக்கியது, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |