தவறுதலாக 12 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கத்தை குப்பையில் வீசிய இந்தியப் பெண்
துபாய்க்குச் சென்ற இந்தியப் பெண்ணொருவர் தவறுதலாக இந்திய மதிப்பில் 12 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கத்தை குப்பையில் வீசிய நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
12 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கத்தை குப்பையில் வீசிய பெண்
துபாயில் 23 ஆண்டுகளாக வாழ்ந்துவந்தவர் காமினி கண்ணன். 2021இல் அவர் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட்டார்.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளார் காமினி.
தன் மகன் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது, தன்னுடைய நான்கு தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டி ஒன்றை வைக்கும் பை பழமையாகிவிட்டிருந்ததால், அவற்றை புதிய பை ஒன்றிற்கு மாற்றிய காமினி, மறந்து அதை டைனிங் டேபிளிலேயே வைத்துவிட்டிருக்கிறார்.
அன்று அவரது மகன் வீட்டை சுத்தம் செய்யும்போது, அந்தப் பையை குப்பையில் வீசியுள்ளார்.
மறுநாள், அதாவது, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி தங்கம் வைத்திருந்த தனது பை காணாமல் போனது தெரியவரவே அவர் அதைத் தேட, அதை தன் மகன் குப்பையில் வீசியது தெரியவந்துள்ளது.
அவ்வளவுதான், தங்கம் போய்விட்டது என்றே முடிவு செய்துவிட்ட காமினி, அது குறித்து பொலிசில் கூட புகார் செய்யவில்லையாம்.
எதிர்பாராத ஒரு சுவாரஸ்ய சம்பவம்
மூன்று நாட்களுக்குப் பிறகு காமினியின் மகனான அபிமன்யூவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அவர்கள் தங்கியிருந்த வீட்டின் பாதுகாவலர், அவரை யாரோ தேடி வந்துள்ளதாக கூற, கீழே சென்றுள்ளார் அபிமன்யூ.
வந்தது பொலிசார்! ஆம், அவரது தாய் குப்பையில் வீசிய தங்கத்தை குப்பை சேகரிப்பவர் எடுத்து விற்கச் சென்றுள்ளார்.
அது குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அவரை விசாரிக்க, அவர் எந்த கட்டிடத்தின் குப்பைத்தொட்டியிலிருந்து அந்த பை கிடைத்தது என்று கூற, பொலிசார் மிகச்சரியாக காமினியின் மகன் வீட்டுக்கே வந்துவிட்டார்கள்.
அபிமன்யூ பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், சில மணி நேர விசாரணை, நகை வாங்கிய பில்களை சரிபார்த்தல் என, அன்றே அந்த தங்க நகைகள் மீண்டும் காமினியை வந்தடைந்துள்ளன.
தாயும் மகனும் இந்த ஆச்சரிய நிகழ்வை எண்ணி வியக்கிறார்கள். துபாய் பொலிசாரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
பின்னே இருக்காதா என்ன? காமினி குப்பையில் வீசிய தங்கத்தின் மதிப்பு, இலங்கை மதிப்பில் 41,99,839.69 ரூபாய்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |