வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இனி வேலை: அமுலுக்கு கொண்டுவரும் நாடு
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை ஸ்பெயின் அமுலுக்கு கொண்டுவர உள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் மன நலனை பாதுக்காக்கும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள், 8 மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உலகளவில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்களும் இந்த நடைமுறையை பரிசோதனை முறையில் மேற்கொண்டன. இந்நிலையில், வாரத்தில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற முறையை ஸ்பெயின் அரசு அமுலுக்கு கொண்டுவர உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் இந்த முறையை அங்கீகரித்த முதல் நாடாகவும் ஸ்பெயின் மாறும். இதுகுறித்து பேசிய மாஸ்பெய்ஸ் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஹெக்டர் டெஜரோ (Héctor Tejero ), தங்களது புதிய திட்டத்தின்படி சுமார் 200 நிறுவனங்கள் இந்த நடைமுறையில் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் 3 ஆண்டு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 4 நாட்கள் மற்றும் 32 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக 50 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊதியத்தை குறைக்காமல், வேலையின்மை என்ற நிலையையும் ஏற்படுத்தாமல், அதிக உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் டெஜரோ நம்பிக்கை தெரிவித்தார். ஸ்பெயின் அரசின் இந்த புதிய அணுகுமுறையை கொரோனா காலத்தில் மற்ற நாடுகளும் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கொரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலும், வேலையின்மையும் அதிகரித்ததால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது முன்னோடி திட்டமாக இருக்கும் என ஹெக்டர் டெஜரோ கூறியுள்ளார்.
பணியிடத்தில் குறைவான நேரங்கள் மட்டுமே இருக்கும் ஊழியர்கள், ஊதிய குறைபாட்டை எதிர்கொள்ள மாட்டர்கள் என கூறியுள்ள அவர், இதனால் தொழிலாளர்களின் வேலைபார்க்கும் திறன் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய நடைமுறை குறித்து ஸ்பெயின் தொழில்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் வேலை முறையில் எழும் சிக்கல் குறித்து தொடர்ந்து ஆராயப்படும் என்றும், வரும் நாட்களில் அந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.