ஈரான் போரின் தாக்கம்: எரிசக்தியை சேமிக்க வேலை நேரத்தை குறைத்த ஆசிய நாடு
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிபொருள் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்காளதேச அரசு எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரசு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மட்டுமே இயங்கும்.
சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தேவையற்ற அரசுச் செலவுகளை குறைக்கவும், தொழிற்துறைகளில் மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட உள்ளது. இதில், நேர அட்டவணை மாற்றம் மற்றும் ஓன்லைன் வகுப்புகள் நடத்தும் வாய்ப்புகள் பரிசீலிக்கப்படுகின்றன.
அதேபோல், பாடசாலைகளுக்கான மின்சார பேருந்துகளை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, வங்காளதேச அரசு பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரத்தை குறைத்து, வாகன விற்பனையையும் கட்டுப்படுத்தியுள்ளது. மக்கள் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலையைத் தவிர்க்க, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட வங்காளதேசம், எரிபொருள் இறக்குமதியில் பெரிதும் சார்ந்துள்ளது. தற்போது, 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி உதவியைப் பெற முயற்சி செய்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |