துபாய் மற்றும் 3 விமான நிலையங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ்
துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுள் மேலும் மூன்று இடங்களுக்கான விமானச் சேவைகள், குறைந்தபட்சம் அக்டோபர் மாதம் வரை மீண்டும் தொடங்கப்படாது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
அக்டோபர் 25 முதல்
முன்னர் திட்டமிடப்பட்டதை விட இரண்டு மாதங்களுக்கு மீண்டும் தொடங்குவதை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் பல முக்கிய இடங்களுக்கான விமான சேவைகளைக் குறைப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
துபாய், தோஹா மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்கான சேவைகள் ஆரம்பத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் கொந்தளிப்பான சூழல் காரணமாக, தனது விமான சேவைகளில் கூடுதல் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தெரிவித்துள்ளது.
துபாய், டெல் அவிவ், பஹ்ரைன் மற்றும் அம்மான் ஆகிய இடங்களுக்கான சேவைகள், கோடை காலம் முடிவடைந்த பின்னரே மீண்டும் தொடங்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. விமானச் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கான தற்போதைய திகதி அக்டோபர் 25 என்றே தெரிய வந்துள்ளது.
தோஹாவுக்கான தினசரி விமான சேவைகளை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்துள்ளதுடன், ஆகஸ்ட் 1 ஆம் திகதி வழக்கமான சேவைகளுக்குத் திரும்பும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
முழுப் பணத்தையும்
ரியாத்துக்கான சேவைகளும் ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டன. அந்த வழித்தடங்களுக்கான வழக்கமான சேவை ஆகஸ்ட் 8 அன்று மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 31 ஆம் திகதி உட்பட, அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபாய், டெல் அவிவ் மற்றும் ரியாத் ஆகிய இடங்களுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களது விமானம் திட்டமிட்டபடி புறப்பட்டாலும் கூட, முழுப் பணத்தையும் திரும்பப் பெறக் கோரலாம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயணிகள் முன்பதிவு மாற்றுக் கட்டணம் ஏதுமின்றித் தங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பயணத்தின் திகதியையோ அல்லது சேருமிடத்தையோ மாற்றிக்கொள்ளலாம்; இருப்பினும், கட்டண வேறுபாடுகள் பொருந்தக்கூடும் என தெரிவித்துள்ளது.
கட்டணமில்லா மறுபதிவு வசதியானது அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபாய், டெல் அவிவ் மற்றும் ரியாத், அத்துடன் சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா ஆகிய இடங்களுக்கு அல்லது அங்கிருந்து இயக்கப்படும் விமானப் பயணங்களுக்குப் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |